காலிஸ்தான் பயங்கரவாதிக்காக.. இந்திய அரசுக்கு சம்மன் அனுப்பிய அமெரிக்க நீதிமன்றம்.. என்ன நடந்தது?
வாஷிங்டன்: காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுவை கொல்ல கடந்தாண்டு முயற்சி நடந்ததாகவும் அதில் இந்திய அதிகாரிக்குத் தொடர்பு இருப்பதாகவும் தகவல் பரவியது. இதற்கிடையே இது குறித்து குர்பத்வந்த் சிங் தொடர்ந்த வழக்கில் இந்தியா பதிலளிக்க அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
இந்தியாவில் காலிஸ்தான் இயக்கம் என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இந்தியாவின் ஒரு பகுதியான பஞ்சாப் மாநிலத்தைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதே இவர்கள் கோரிக்கை. இதற்காகப் பல காலிஸ்தான் அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.

காலிஸ்தான் பயங்கரவாதி: அதேநேரம் வெளிநாடுகளில் காலிஸ்தான் அமைப்பிற்கு எந்தவொரு தடையும் இருப்பதில்லை. இதன் காரணமாகவே அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் காலிஸ்தான் அமைப்பினர் சுதந்திரமாகவே இயங்கி வருகிறார்கள். நமது நாட்டின் சுதந்திர தினம், குடியரசு தினம் கொண்டாட்டங்களின் போது இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி அத்துமீறுவார்கள்.
மேலும், இவர்கள் இந்தியாவிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சொல்லப்படுகிறது. அப்படி பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடும் ஒருவர் தான் குர்பத்வந்த் சிங். தற்போது கனடாவில் வசித்து வரும் இவரைக் கொலை செய்ய முயன்றதாகவும் அதில் இந்திய அதிகாரிக்குத் தொடர்பு இருப்பதாகவும் தகவல் பரவியது.
வழக்கு: இதற்கிடையே இந்த விவகாரத்தில் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது தன்னை கொலை செய்ய இந்திய அதிகாரிகள் சதி செய்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தான் இப்போது இந்திய அரசுக்கு நியூயார்க் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
சம்மன்: இந்திய அரசு, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரா அமைப்பின் முன்னாள் தலைவர் சமந்த் கோயல், ரா அமைப்பின் ஏஜென்ட் விக்ரம் யாதவ் மற்றும் இந்தியத் தொழிலதிபர் நிகில் குப்தா ஆகியோருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த 3 வாரங்களில் இந்த விவாகரத்தில் பதிலளிக்குமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம் இந்த சம்மனுக்கு இதுவரை மத்திய அரசு பதிலளிக்கவில்லை. இந்த சம்மன் குறித்த விவகாரங்களை குர்பத்வந்த் சிங் தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். இருப்பினும், அவரது ட்விட்டர் பக்கம் இப்போது முடக்கப்பட்டுள்ளது.
பின்னணி என்ன: முன்னதாக கடந்த நவம்பரில், பிரிட்டனில் இருந்து வெளிவரும் பைனான்சியல் டைம்ஸ் இது குறித்த செய்தியை முதலில் வெளியிட்டு இருந்தது. அதாவது காலிஸ்தான் பிரிவினைவாதியாக அறியப்படும் குர்பத்வந்த் சிங், அமெரிக்கா மற்றும் கனடா என இரண்டு நாடுகளிலும் குடியுரிமையைப் பெற்றவர். அவரை கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும் அதை அமெரிக்கா முறியடித்ததாகவும் செய்தி வெளியானது. இந்த தகவலைப் பின்னர் அமெரிக்காவும் உறுதி செய்தது.
அதேநேரம் குர்பத்வந்த் சிங்கை கொல்ல முயன்றதாக வெளியான இந்தத் தகவலை இந்தியா தொடக்கம் முதலே திட்டமிட்டு மறுத்தே வருகிறது. இதற்கிடையே அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது குறித்தும் வெளியுறவுத் துறை அமைச்சகம் கருத்து கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்க நீதிமன்றத்தின் நடவடிக்கை அரசின் கொள்கைக்கு முரனானது என்றும் இந்த விவகாரத்தில் உயர்மட்ட விசாரணையை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
வெளியுறவுத் துறை: இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், "அமெரிக்க நீதிமன்றத்தில் தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் இந்திய அதிகாரிக்குத் தொடர்பு இருப்பதாகச் சொல்வது கவலைக்குரிய விஷயம். இது அரசின் கொள்கைக்கு முரணானது" என்று கூறினார்.
முன்னதாக கடந்த மே மாதம், வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் இந்த விவகாரத்தில் நேரடியாகவே கருத்து கூறியிருந்தார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்த ஜெய்சங்கர், ஆனால் இது இந்தியா அமெரிக்கா உறவைப் பாதிக்காது எனக் கூறியிருந்தார். அதேபோல இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரும் இதனால் இந்தியா அமெரிக்கா உறவு பாதிக்கப்படாது எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications