இந்தியாவுக்கு மேலும் 25% வரியை நீக்கிய டிரம்ப்.. ரஷ்யா கச்சா எண்ணெய்க்கு போடப்பட்ட அபராத வரி ரத்து
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 25 சதவீத வரியை விதித்தார். இந்த வரி தற்போது அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பரஸ்பர வரியில் 7 சதவீதம் நீக்கப்பட்டு இருந்த நிலையில் அமெரிக்கா நமக்கு விதித்த 50 சதவீத வரி இப்போது வெறும் 18 சதவீதமாக சரிந்துள்ளது. இது நம் நாட்டின் வர்த்தகர்களை ஹேப்பியாக்கி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்தார். அமெரிக்காவின் பொருட்களுக்கு நம் நாடு அதிகப்படியான வரி விதிப்பதாக குற்றம்சாட்டி பரஸ்பர வரியாக 25 சதவீதமும், அதன்பிறகு உக்ரைன் மீது போர் புரிந்து வரும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி 25 சதவீதம் என்று 50 சதவீத வரியை விதித்தார்.

இழுபறிக்கு முடிவு
இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி பெரிதும் தடைப்பட்டது. வர்த்தகர்கள் அதிகளவில் பாதிப்பை எதிர்கொண்டனர். மேலும் நம் நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக பிரச்சனை வெடித்தது.
இதையடுத்து பிரச்சனையை தீர்க்க இருதரப்பும் பேச்சுவார்த்தையை தொடங்கியது. பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படவில்லை. இழுபறி நீடித்து வந்தது. இப்போது இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
18% வரி குறைப்பு
இந்நிலையில் தான் கடந்த 2ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசிய நிலையில் இருநாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் உறுதியானது. இதன்மூலம் இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் நம் நாட்டுக்கு கூடுதலாக அபராத வரியாக விதிக்கப்பட்ட 25 சதவீதத்தையும் நீக்க அமெரிக்க அதிபர் டிரம்பின் வெள்ளை மாளிகை உறுதியளித்தது.
ரஷ்யா ஆயில் வரி ரத்து
இந்நிலையில் தான் தற்போது அந்த அபராத வரி 25 சதவீதமும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் நம் நாட்டுக்கு அமெரிக்க விதித்த 50 சதவீத வரி என்பது இப்போது வெறும் 18 சதவீதமாக குறைந்துள்ளது.
இது நம் நாட்டின் வர்த்தகர்களுக்கு குட்நியூஸாக அமைந்துள்ளது. ஏனென்றால் டொனால்ட் டிரம்ப் விதித்த 50 சதவீத வரியால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்றுமதி மளமளவென சரிந்தது. ஆனால் இப்போது வரி குறைக்கப்பட்டுள்ளதால் வரும் நாட்களில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி அதிகரிக்கும்.
ரஷ்யாவை கைவிடும் இந்தியா?
இருப்பினும் இந்த வரி குறைப்பு நடவடிக்கை என்பது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்ற அடிப்படையில் தான் டிரம்ப் குறைத்துள்ளார். ரஷ்யா என்பது நம் நாட்டின் நெருங்கிய நட்பு நாடு. தற்போது அந்த நாடு பொருளாதார நெருக்கடியில் உள்ளது.
உக்ரைன் மீதான போரால் ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் விதித்த பொருளாதார தடைகள் தான் அதற்கு முக்கிய காரணம். இதனால் நம் நாடு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியது அந்த நாட்டின் நிதி நிலைமைக்கு கைக்கொடுத்தது.
இப்போது டிரம்பின் வரி குறைப்பை நாம் தொடர்ந்து பெற வேண்டும் என்றால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை கைவிட வேண்டும். இது நம் நாட்டை சிக்கலில் சிக்க வைத்துள்ளது. இதனால் இந்த விஷயத்தில் இந்தியா என்ன செய்யும்? ரஷ்யாவை கைவிடுமா? இல்லாவிட்டால் அமெரி்காவை வேறு வகையில் சமாளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications