ஹெச்-1பி விசாவை தவிர்க்கும் இந்திய நிறுவனங்கள்.. அமெரிக்காவில் நடக்கும் மாற்றம்! காரணம் என்ன?
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப் வந்த பிறகு ஹெச்-1பி விசாக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் சூழலில், இந்திய நிறுவனங்கள் தங்கள் திட்டத்தை அதற்கேற்ப மாற்ற ஆரம்பித்துள்ளன. இதற்கு என்ன காரணம்.. ஹெச்-1பி விசா தேவை வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
டிரம்ப் வந்தது முதலே வெளிநாட்டினர் அமெரிக்காவுக்குச் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஹெச்-1பி விசா பெற பல்வேறு கட்டுப்பாடுகளை டிரம்ப் அரசு கொண்டு வந்துவிட்டது. ஹெச்-1பி விசா இந்தியர்களுக்கே அதிகம் பயன்பட்டு வந்த சூழலில் இது இந்தியாவுக்கே பெரிய சிக்கலைக் கொடுக்கும் எனப் பலரும் கருதினர்.

தவிர்க்கும் இந்திய நிறுவனங்கள்
இதற்கிடையே அமெரிக்க அரசின் கெடுபிடிகளால் இந்திய ஐடி நிறுவனங்கள் தங்கள் அணுகுமுறையை மாற்ற ஆரம்பித்துள்ளன. அதாவது ஹெச்-1பி விசாக்களைச் சார்ந்திருப்பதை இந்திய ஐடி நிறுவனங்கள் குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு ஐடி வல்லுநர்களை அனுப்பி வைக்கும். அதாவது இந்தியர்கள் ஹெச்-1 பி விசா பெற்று அமெரிக்காவில் சென்று வேலை பார்ப்பார்கள்.
இதனால் இந்திய நிறுவனங்கள் அதிக அளவில் ஹெச்-1பி விசாக்களைப் பயன்படுத்தின. ஆனால், இப்போது ஹெச்-1 பி விசாக்களை பெறுவதை டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற முன்னணி நிறுவனங்கள் குறைத்துக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் அமெரிக்காவின் அமேசான், கூகிள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள் இப்போது ஹெச்-1பி விசாக்களை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.
அமெரிக்க அரசின் டேட்டா
இப்போது படுவேகமாக வளரும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட துறைகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்த நிறுவனத்திற்குத் தேவைப்படுகிறார்கள். இதனால் இந்த நிறுவனங்கள் ஹெச்-1பி விசா பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவைகள் (USCIS) அமைப்பு வெளியிட்டுள்ள டேட்டாவில் இது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
46% சரிவு
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் டெக், விப்ரோ, டெக் மஹிந்திரா, மற்றும் LTI மைண்ட்ரீ ஆகிய நிறுவனங்களின் ஹெச்1-பி விசா விண்ணப்பங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 46% குறைத்துள்ளன. இதில் டிசிஎஸ் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு.. இந்தியாவின் மிக பெரிய ஐடி நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ் நிறுவனத்திற்கு அமெரிக்காவிலும் கணிசமான ஊழியர்கள் உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 5,505 பேரை ஹெச்-1பி விசா மூலம் டிசிஎஸ் அமெரிக்காவுக்கு அனுப்பி இருக்கிறது.
அதேநேரம் மற்ற சர்வதேச ஐடி நிறுவனங்களான அக்சென்ச்சர், கேப்ஜெமினி, காக்னிசென்ட், ஐபிஎம் போன்றவை இதே காலகட்டத்தில் ஹெச்-1பி விசா கோரி விண்ணப்பிப்பது 44% வரை குறைந்துள்ளன.
மாறும் டிரெண்ட்
ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தாலும் கூட இன்னுமே டெக் நிறுவனங்கள் தான் அதிகளவில் ஹெச்-1பி விசாவை யூஸ் செய்கின்றன. முன்பே குறிப்பிட்டது போல ஏஐ துறை வளர்ச்சியே இதற்குப் பிரதான காரணம்.. சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ, ஆந்த்ரோபிக் உள்ளிட்டவை அதிகளவில் ஹெச்-1பி விசாக்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.
சுருக்கமாகச் சொல்லப் போனால் வழக்கமான ஐடி நிறுவனங்கள் ஹெச்-1பி விசாவை நம்பி இருப்பதைக் குறைத்து கொள்கின்றன. மறுபுறம் ஏஐ தொழில்நுட்ப நிறுவனங்கள் ஹெச்-1பி விசாக்கள் கோரி அதிகம் விண்ணப்பிக்கின்றன. இருப்பினும், அவை கடந்த காலங்களில் இருந்த அளவுக்கு இல்லை என்பதே உண்மை.
காரணம் என்ன
இப்படி ஹெச்-1பி விசா பயன்பாடு குறைவதற்குப் பல காரணங்கள் உள்ளன. புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அதிகரித்து வரும் விதிமுறைகள் ஆகியவை ஹெச்-1பி விசா பெறுவதைக் கடினமானதாகவும், செலவு மிக்கதாகவும் ஆக்கியுள்ளன. இந்தச் சூழலில் வெளிநாட்டு ஐடி நிறுவனங்களுக்குக் கூடுதல் வரி விதிக்கும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள ஹையர் சட்டம் அமலுக்கு வந்தால் அது நிலைமையை மோசமாக்கும். குறிப்பாக இந்தியாவுக்குப் பெரிய சிக்கலைக் கொடுக்கும்.
புது யுக்தி
இதனால் மாறி வரும் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்திய ஐடி நிறுவனங்கள் இப்போது தங்கள் உத்திகளை மாற்றியுள்ளன. அமெரிக்காவுக்கு வல்லுநர்களை அனுப்புவதற்குப் பதிலாக, அமெரிக்கர்களையே வேலைக்கு எடுக்க ஆரம்பித்துள்ளன. அப்படி இல்லை என்றால் அமெரிக்காவில் இருக்கும் வேலையை மொத்தமாக மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் மாற்ற ஆரம்பித்துள்ளன. இந்த மாற்றம் சீராக நடப்பதால் வரும் காலத்தில் ஹெச்-1பி விசாக்களின் தேவை மேலும் குறையலாம்.












Click it and Unblock the Notifications