அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி போடுவோம்! அறிவித்த டிரம்ப் -மோடிக்கு சிக்கல்
வாஷிங்டன்: இந்தியாவுக்கு அடுத்த 24 மணிநேரத்தில் அமெரிக்காக மிகவும் கணிசமான வரிகளை உயர்த்த உள்ளது. ரஷ்யா உடன் இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் கடும் கோபத்தில் உள்ள டொனால்ட் டிரம்ப் இப்படி அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு ஏற்கனவே 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ள நிலையில் டிரம்பின் தற்போதைய அறிவிப்பு நம் நாட்டின் மீது கூடுதல் வரி விதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டை தொடர்ந்து சீண்டி வருகிறார். ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடையை செயல்படுத்தியது. ஆனால் நம் நாடு தொடர்ந்து ரஷ்யாவுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறது. ஏனென்றால் ரஷ்யா நம் நாட்டின் நெருங்கிய நட்பு நாடு.

இதனால் அமெரிக்காவின் பொருளாதார தடைகளை கண்டுக்கொள்ளாமல் நம் நாடு சலுகை விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இப்படி நாம் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது டொனால்ட் டிரம்பின் கண்களை உறுத்துகிறது. நம் நாட்டிடம் இருந்து கிடைக்கும் பணத்தை ரஷ்யா, உக்ரைன் மீதான போருக்கு பயன்படுத்துகிறது என்று டிரம்ப் கூறி வருகிறார்.
இதனால் ரஷ்யாவுடனான வர்த்தகத்தை கைவிட வேண்டும் என்று டிரம்ப் நம் நாட்டை மிரட்டி வருகிறார்.ஆனால் மத்திய அரசு அதனை ஏற்கவில்லை. இதனால் நம் நாட்டுக்கு 25 சதவீத வரிகளை டிரம்ப் விதித்துள்ளார். நாளை மறுநாள் முதல் இந்த வரி அமலுக்கு வர உள்ளது. இதற்கிடையே தான் தற்போது டிரம்ப் நம் நாட்டின் மீதான வரியை கணிசமாக உயர்த்துவதாக அறிவித்துள்ளார். 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கான வரி விதிப்பு கடுமையாக இருக்கும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் சிஎன்பிசி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: அவர்கள் (இந்தியா)ள் பிற நாடுகளை விட அதிகப்படியான வரி விதிப்பை நடைமுறையில் வைத்துள்ளனர். இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்க நாங்கள் முடிவு செய்தோம். ஆனால் அடுத்த 24 மணி நேரத்தில் நான் அதைவிட கணிசமாக வரியை உயர்த்த நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள் ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெயை வாங்கி வருகின்றனர். இதன்மூலம் அவர்கள் ரஷ்யாவின் போர் இயந்திரத்தை எரிபொருளை ஊற்றுகிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் நாங்கள் இந்தியாவுடன் சிறிய அளவில் தான் வணிகம் செ்கிறோம். ஆனால் இந்தியா எங்களுடன் அதிகப்படியான வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் நம் நாட்டுக்கும் 25 சதவீதத்தை விட அதிகப்படியான வரியை டிரம்ப் விதிக்க திட்டமிட்டுள்ளார்.
இது நம் நாட்டுக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். ஏனென்றால் ஏற்கனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இது இன்னும் உயர்த்தும்போது நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். தற்போதைய வரியை விட அதிகப்படியான வரியை அமெரிக்காவுக்கு வழங்கினால் மட்டுமே அந்த பொருட்களை அங்கு விற்பனை செய்ய முடியும்.
இதன்மூலம் பிரதமர் மோடிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒன்று அமெரிக்கா சொல்வது போல் ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், அமெரிக்காவுக்கு மாற்றாக நம் நாட்டின் பொருட்களை விற்பனை செய்யும் வகையில் பிற நாடுகளில் மார்க்கெட் தேட வேண்டும்.
அதுவும் அவ்வளவு எளிதானது இல்லை. ஏனென்றால் நம் நாட்டின் ஏற்றுமதியில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்து வருகிறது. 2024 நிதி ஆண்டில் நாம் அமெரிக்காவுக்கு 7.6 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருட்களை ஏற்றுமதி செய்தோம்.ஆனால் அமெரிக்கா நமக்கு ரூ.3.6 லட்சம் கோடி பொருட்களை மட்டுமே விற்பனை செய்தது. இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகத்தில் நாம் ரூ.4 லட்சம் கோடி வரை நாம் அதிகம் வர்த்தகம் செய்துள்ளோம்.
இதனால் டிரம்ப் வரி விதிக்கும்பட்சத்தில் அது நம் நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஜிடிபி எனும் உள்நாட்டு உற்பத்தியை 0.5 சதவீதம் வரை குறைக்கலாம். இதனை காரணமாக வைத்து தான் டிரம்ப் வரி அதிகம் விதிப்பேன். ரஷ்யாவுடனான உறவை துண்டிக்க வேண்டும் என்று தொடர்ந்து மிரட்டி வருகிறார். இதனால் பிரதமர் மோடிக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications