"தைரியம் இருந்தா வாங்கடா".. ஈரான் கூறிய வார்த்தை! ஹார்முஸ் ஜலசந்தி மேட்டரில் பின்வாங்கிய டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்கா, இஸ்ரேலின் போர் நடவடிக்கையில் ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடி பல்வேறு நாடுகளில் கச்சா எண்ணெய், கேஸ் சப்ளையை நிறுத்தி உள்ளது. இதன்மூலம் போரை கைவிட அமெரிக்காவுக்கு, ஈரான் அழுத்தம் கொடுக்கிறது. இந்நிலையில் தான் ஹார்முஸ் ஜலசந்தியை கட்டுப்பாட்டில் எடுப்பதாக கூறிய அமெரிக்கா தற்போது ஈரானுக்கு பயந்து பின்வாங்கி உள்ளது. இது இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீதான போர் அமெரிக்காவுக்கு பெரும் சவால்களை ஏற்படுத்தி உள்ளது. ஈரான், அமெரிக்காவின் நட்பு நாடுகளை தாக்கி வருவதோடு, முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடி உள்ளது. இந்த கடல்வழி பாதை வழியாக தான் உலகில் 20 சதவீதம் வரையிலான கச்சா எண்ணெய், கேஸ் வர்த்தகம் நடக்கும்.

சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஈராக் உள்பட பிற மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் கச்சா எண்ணெய், கேஸ் உள்ளிட்டவை கொண்டு செல்லப்படும். தற்போது அது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரபு நாடுகளின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, நம் நாடு, சீனா உள்பட பல்வேறு ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய், கேஸ் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த பேட்டியில், ''தேவை என்றால் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க படைகள் கண்ட்ரோலில் எடுக்கும். ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை சரிசெய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஈரான் மீது அடுத்த வாரம் முதல் தாக்குதல் தீவிரமாகும்''என்று கூறியிருந்தார்.
ஆனால் தற்போது அமெரிக்கா பின்வாங்கி உள்ளது. ஈரானின் பதிலடி தாக்குதல் காரணமாக அமெரிக்கா, ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்றும் முடிவை தள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அமெரிக்காவின் எரிசக்தி துறையின் அமைச்சர் கிறிஸ் ரைட் உறுதியளித்துள்ளார். இதுபற்றி அவர் சிஎன்பிசி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவரிடம், ''ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை கச்சா எண்ணெய், கேஸ் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் கப்பல்கள் கடக்கும் வகையில் அமெரிக்கா பாதுகாப்பு வழங்குமா?''என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு எரிசக்தி துறை அமைச்சர் கிறிஸ் ரைட் மறுப்பு தெரிவித்தார்.
இதுபற்றி கிறிஸ் ரைட், ''அமெரிக்க படைகளின் கவனம் தற்போது ஈரானை தாக்குவதில் தான் உள்ளது. ஈரானின் தாக்கும் திறனை அளிப்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறது. இதனால் இந்த வேளையில் ஹார்முஸ் ஜலசந்தியில் எந்த கப்பல்களுக்கும் அமெரிக்கா கடற்படையால் பாதுகாப்பு வழங்க முடியாது. இதற்கு நாங்கள் தயாராக இல்லை. ஆனால் விரைவில் நீங்கள் கேட்டது நடக்கும். எதிர்காலத்தில் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க அமெரிக்கா தீவிரமாக தயாராகி வருகிறது'' என்றார்.
இது கிறிஸ் ரைட்டின் முந்தைய கருத்துடன் மாறுபட்டுள்ளது. முன்னதாக அவர் தனது வலைதள பக்கத்தில், ''அமெரிக்க கடற்படை உதவியுடன் கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்தது'' என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்பிறகு அந்த பதிவை அவர் நீக்கினார்.
முன்னதாக கிறிஸ் ரைட்டின் இந்த கருத்தை ஈரான் முற்றிலுமாக மறுத்தது. இதுதொடர்பாக ஈரானின் புரட்சிகரக் காவல் படையின் செய்தி தொடர்பாளர் அலிமொஹம்மத் நைனி கூறுகையில், ''அமெரிக்க பயங்கரவாத ராணுவத்தின் பாதுகாப்பில் ஒரு கச்சா எண்ணெய் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்ததாக கூறுவது முற்றிலும் பொய்யானது. ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படையின் எந்தவொரு நகர்வையும் ஈரான் கட்டுப்படுத்தும். தாக்குதல் நடத்தப்படும்'' என்றார்.
ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ளதால் அமெரிக்காவின் நட்பு நாடுகளான சவுதி, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், பஹ்ரைன் உள்ளிட்ட அரபு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், கேஸ் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இது அந்த நாடுகளுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
மறுபுறம் சீனா, இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் அதனை சுற்றிய நாடுகளில் கச்சா எண்ணெய், கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. ஒருவேளை அமெரிக்கா கப்பற்படை ஹார்முஸ் ஜலசந்தியை கட்டுப்பாட்டில் எடுத்தால் அதன் வழியாக எளிதாக கப்பல்கள் செல்ல முடியும். ஆனால் தற்போது அமெரிக்கா பின்வாங்கி இருப்பது பல்வேறு நாடுகளுக்கு பிரச்சனையாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications