காலை8 மணிக்கே..மண்டையை பிளக்கும் 100டிகிரி வெப்பம்.. இப்போது வெயில் குறைய வாய்ப்பில்லை..வானிலை மையம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் கடந்த நூற்றாண்டில் இல்லாத அளவுக்குக் காலை 8 மணிக்கே அதிகபட்சமாக 100 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் வெப்ப நிலை புதிய உச்சம் தொட்டுள்ளது. இதனால் துருவங்களிலுள்ள பனிப்பாறைகள் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உருகி வருகின்றன.
இது மக்களுக்கு மட்டுமின்றி விலங்குகள் உட்பட ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்து வருகிறது.

100 ஆண்டுகளில் இல்லாத அளவு
இந்நிலையில், அமெரிக்காவில் பல தென்மேற்கு பகுதிகளில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது வெப்பநிலை உச்சம் தொட்டுள்ளது. அங்குள்ள பாலைவனங்களில்கூட கடந்த காலங்களில் இவ்வளவு வெப்பம் பதிவானதில்லை. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்திலுள்ள டியூசன் நகரில் காலை 8 மணிக்கே வெப்ப நிலை சதமடித்தது.

காலை 8 மணிக்கே 100 டிகிரி
1948ஆம் ஆண்டிற்குப் பிறகு அங்குப் பதிவு செய்யப்படும் அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும். கடந்த வியாழக்கிழமை காலை 8.14 மணிக்கு வெப்ப நிலை 100 டிகிரியாக பதிவாகியுள்ளது. இந்த அதிக வெப்பம் காரணமாக வாரம் முழுவதும் அரிசோனா, நெவாடா, உட்டா, கலிஃபோர்னியா மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இரவு நேரங்களிலும் அங்கு வெப்பநிலை குறைவதில்லை. வெள்ளிக்கிழமை இரவு பீனிக்ஸில் குறைந்தபட்ச வெப்பமாக 92 டிகிரி பதிவாகியுள்ளது,

அமெரிக்க நகரங்கள்
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் இதே நிலைமை தான். கடந்த வியாழக்கிழமை, கலிபோர்னியாவின் பாம் ஸ்பிரிங்ஸில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வெப்பம் அதிகபட்சமாக 123 டிகிரி வரை சென்றது. சாலட் லேக் சிட்டி, லாஸ் வேகாஸ் என அனைத்து நகரங்களிலும் வெப்பம் உச்சத்தில் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

வானிலை மையம்
அமெரிக்கர்களுக்குச் சற்றே ஆறுதல் தரும் செய்தியாக அடுத்த வாரம் தென்மேற்கு நகரங்களில் வெப்ப நிலை குறையும் என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்த ஆண்டு வெயில் காலம் நீண்ட காலம் இருக்கும் என்பதால் வெப்ப நிலை தொடர்ந்து குறைய தற்போது வாய்ப்பில்லை என்றும் அமெரிக்க வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications