அடடே சூப்பர்! அதிரடி காட்டும் எலான் மஸ்க்! போட்டியாக புதிய தளத்தை இறக்கும் ட்விட்டர் நிறுவனர் டோர்சி
வாஷிங்டன்: ட்விட்டர் தளத்தை இப்போது எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில், ட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி வேறு ஒரு திட்டத்தை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த டிஜிட்டல் உலகத்தில் சமூக வலைத்தளங்கள் தான் இப்போது உலகெங்கும் ஆக்கிரமித்து உள்ளது. பல அரசு அறிவிப்புகள் கூட இப்போது சமூக வலைத்தளங்களில் வெளி வரத் தொடங்கியுள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பல்வேறு சமூக வலைத்தளங்கள் இருந்தாலும் கூட, எப்போதும் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பது ட்விட்டர் தான். பிரபலங்களின் சாய்ஸாக இருப்பதும் ட்விட்டர் தான்.

ட்விட்டர்
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து டெக் நிறுவனங்களும் மிகப் பெரிய அளவில் வளர்ந்து இருந்தன. ஆனால், ட்விட்டர் நிறுவனத்தால் எதிர்பார்த்த வளர்ச்சியை அடைய முடியவில்லை. மற்ற டெக் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் ட்விட்டர் பங்கும் பெரியளவில் எங்கும் செல்லவில்லை. இதனால் ட்விட்டர் முதலீட்டாளர்கள் அதிருப்தியிலேயே இருந்தனர். இந்தச் சூழலில் தான் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்.

எலான் மஸ்க்
ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக மாற்றவே மஸ்க் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே பராக் அகர்வால் உள்ளிட்ட டாப் அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர். விரைவில் அங்கு ஆட்குறைப்பும் நடக்க உள்ளது. ஒரு தரப்பினர் ட்விட்டர் தளத்தை எலான் மஸ்க் வாங்கியதற்கு ஆதரவு தெரிவிக்கும் அதே சூழலில் மற்றொரு புறம் எலான் மஸ்கின் அடாவடி நடவடிக்கைகளால் இதை எதிர்ப்பவர்களும் இருக்கவே செய்கின்றனர்.

ஜாக் டோர்சி
இதனிடையே ட்விட்டர் இணை நிறுவனரான ஜாக் டோர்சி தனியாக ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். இதற்கான பீட்டா சோதனையையும் அவர் சத்தமின்றி தொடங்கியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் தான் ப்ளூஸ்கை (Bluesky) என்ற சமூக வலைத்தளத்தைத் தொடங்க உள்ளதாக ஜாக் டோர்சி அறிவித்து இருந்தார். இப்போது அதற்கான பீட்டா டெஸ்டிங் தான் தொடங்கப்பட்டு உள்ளது.

பீட்டா டெஸ்டிங்
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அடுத்தகட்ட டெஸ்டிங்கை தொடங்கி உள்ளோம். இது சவாலான செயல் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். நெட்வொர்க் செயல்பாட்டிற்கு வந்த உடன் இதற்குப் பலரது ஒருங்கிணைப்பு தேவை. இதில் என்ன மாதிரியான பிரச்சினை வரும் என்பதைக் கண்டறிய பீட்டா டெஸ்டிங்கை ஆரம்பிக்கிறோம். நாங்கள் தேர்ந்தெடுத்துள்ள சிலரை வைத்து மட்டுமே இப்போது இந்த பீட்டா டெஸ்ட் நடக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.

டெக் நிறுவனங்கள்
சமூக வலைத்தளங்கள் மக்களானது என்ற நிலை மாறிவிட்டது. இப்போதெல்லாம் டெக் நிறுவனங்களில் கைகளில் தான் அதிகப்படியான அதிகாரங்கள் உள்ளன. எந்த மாதிரியான கருத்துகள் மக்களிடையே சென்றடைய வேண்டும் என்பதைக் கூட டெக் நிறுவனங்கள் தீர்மானிக்கும் சூழல் உருவாகலாம் எனச் சிலர் அஞ்சுகின்றனர். இதனால் நிறுவனங்களுக்கு அதிக அதிகாரம் இல்லாத வகையில் சமூக வலைத்தளங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஒரு பக்கம் எழுந்துள்ளது.

முக்கியம்
இதற்காகவே ட்விட்டர் நிறுவனர் டோர்சி இந்த ப்ளூஸ்கை தளத்தை உருவாக்கி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "சமூக வலைத்தளங்களின் அடிப்படை செயல்முறையை மாற்றத் துடிக்கும் நிறுவனங்களுக்கு இது சவாலாக இருக்கும்" என்றார். கடந்த 2019இல் ப்ளூஸ்கி தளம் முதலில் தொடங்கப்பட்டது. அப்போது டோர்சி ட்விட்டரில் தான் இருந்தார். இருப்பினும், மே 2022இல் அவர் ட்விட்டர் போர்ட் குழுவிலிருந்து இருந்து முற்றிலுமாக விலகினார்.












Click it and Unblock the Notifications