20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கனை விட்டு வெளியேறும் அமெரிக்க படைகள்... முடிவுக்கு வரும் பகை..!
வாஷிங்டன்: ஆஃப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக திருப்பி அழைக்கப்படும் என அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வருவதால் உலக அரங்கில் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஆப்கனை விட்டு வெளியேறும் அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் ஆஃப்கன் அரசுடன் தலிபான்கள் முறையாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அமெரிக்கா விடுத்த கோரிக்கைகளை தலிபான்கள் ஏற்றுக்கொண்டனர்.
இதனிடையே 20 ஆண்டுகால பகையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்திருக்கிறார் அதிபர் ஜோ பிடன்.

ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தை வளப்படுத்த அந்நாட்டு தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை ஆபத்தில் சிக்க வைக்க விரும்பாததால் அடுத்த தலைமுறை அமெரிக்கர்களை ஆப்கனுக்கு அனுப்ப போவதில்லை எனவும் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
ஆப்கன் அரசை காக்கும் திறன் அந்நாட்டு ராணுவத்துக்கு உள்ளதாக தாம் நம்புவதாகவும் ஆப்கனிலிருந்து ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் முழுமையாக திருப்பி அழைக்கப்படும் எனவும் உறுதி தந்துள்ளார்.
முன்னதாக ஆப்கனிலிருந்து செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்க படைகள் திருப்பி அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு முன்பாகவே வாபஸ் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது அமெரிக்கா.












Click it and Unblock the Notifications