சர்வதேச கவனம் பெற்ற பத்திரிகையாளர் ஜுபைர் கைது.. டெல்லி போலீசுக்கு உலக ஊடக அமைப்புகள் கண்டனம்
வாஷிங்டன்: ஆல்ட் நியூஸ் இணை நிறுவனரும் பத்திரிகையாளருமான முஹம்மது ஜுபைர் நேற்று டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது கைதுக்கு பன்னாட்டு ஊடக அமைப்புகள், ஊடகங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
Recommended Video
சர்ச்சைக்குரிய பேச்சுக்களுக்கு பெயர்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். அதேபோல் அக்கட்சியின் நவீன் குமார் ஜிண்டாலும் முஹம்மது நபி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்திட்டார்.

தலைமறைவான நுபுர்
நுபுர் ஷர்மாவின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மும்பையில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் மும்பை போலீஸ் திட்டமிட்டு இருக்கிறது. இதேபோல் டெல்லி, கொல்கத்தா போலீசும் நுபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறது. ஆனால், அவர் தலைமறைவாகி இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உலக நாடுகள்
இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சவூதி அரேபியா, ஈரான் அமீரகம், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகள், இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஆகிய இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

பத்திரிகையாளர் ஜுபைர்
நுபுர் ஷர்மாவின் இந்த சர்ச்சை கருத்தை உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல முக்கிய காரணமாக இருந்தவர் பத்திரிகையாளர் முஹம்மது ஜுபைர் என்று கூறப்படுகிறது. நுபுர் ஷர்மாவின் பேச்சு தொடர்பாக தனது ஆல்ட் நியூஸ் இணையதளத்தில் முதன்முதலில் செய்தி வெளியிட்ட அவர், தனது ட்விட்டர் பக்கத்திலும் அந்த வீடியோவை பகிர்ந்து இருந்தார். இதன் காரணமாக அவருக்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் எழுந்தன.

வழக்குப்பதிவு
தொடர்ந்து மதக்கலவரங்களை தூண்டும் விதத்தில் பகிரப்படும் பொய்யான செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறிந்து வெளியிட்டு வந்த ஜுபைர் ட்விட்டரில் தனது கருத்துக்களையும் தெரிவித்து வந்தார். சாமியார்கள் மாநாட்டில் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என பேசியதற்காக கடும் விமர்சனங்களை முன்வைத்த ஜுபைர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு ட்விட்டரில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பதிவிட்டதாக கூறி பதிவான வழக்கில் நேற்றிரவு ஜுபைர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

பன்னாட்டு ஊடக அமைப்புகள் கண்டனம்
ஜுபைரின் கைதை கண்டித்து இந்திய பத்திரிகை அமைப்புகள் மட்டுமின்றி பன்னாட்டு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பன்னாட்டு பத்திரிகையாளர் அமைப்பான CPI (Committee to Protect Journalists) இன் ஆசிய ஒருங்கிணைப்பாளர் ஸ்டீவன் பட்லர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜுபைரின் கைது இந்தியாவில் பத்திரிகையாளர் சுதந்திரம் பறிக்கப்படுவதை காட்டுவதாக கூறியுள்ளார்.

வாஷிங்டன் போஸ்ட் கோரிக்கை
குறிப்பிட்ட விவகாரங்கள் தொடர்பாக செய்தி வெளியிடும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை அரசு உருவாக்கி இருப்பதாக கூறிய அவர், ஜுபைரை எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். CPI வெளியிட்டுள்ள இந்த அறிக்கையை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அமெரிக்க நாளிதழான வாஷிங்டன் போஸ்டின் ஊடக பாதுகாப்புக்குழு, "பத்திரிகைத்துறை ஒன்றும் குற்றமில்லை" என்று பதிவிட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications