பயங்கரவாதி பன்னுன் கொலை சதி: செக் குடியரசில் பிடிபட்ட நிகில் குப்தா அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்!
வாஷிங்டன்: இந்தியாவில் சீக்கியர்களுக்கு "காலிஸ்தான்" எனும் தனிநாடு கோரும் குர்பத்வந்த் சிங் பன்னுன் என்ற பயங்கரவாதியை படுகொலை செய்ய சதி செய்ததாக செக் குடியரசு நாட்டில் கைது செய்யப்பட்ட நிகில் குப்தா என்ற இந்தியர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இந்தியாவில் சீக்கியர்களுக்காக காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்கும் முயற்சிகள் பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டன. 1984-ம் ஆண்டு இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்த போது சீக்கியர்களுக்கு தனிநாடு கோரிய காலிஸ்தான் விடுதலைப் படையை அழித்தொழித்தார்.

இதன் பின்னர் காலிஸ்தான் பயங்கரவாதிகள் கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 'அரசியல் தஞ்சம்' அடைந்தனர். ஆனாலும் இப்போதும் சீக்கியர்களுக்கான தனிநாடு கோரும் விஷம பிரசாரம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு பெயர்களில் இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
சீக்கியர்களுக்கு தனிநாடு கோரும் அமைப்புகளில் ஒன்று சீக்கியர்களுக்கான நீதி என்ற இயக்கம். இதன் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன். அமெரிக்கா, கனடா குடியுரிமை பெற்ற பன்னுன் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராகவும் காலிஸ்தான் தனிநாட்டுக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்து வருகிறார்.
இதனால் குர்பத்வந்த் சிங் பன்னுன் ஒரு பயங்கரவாதி என இந்திய அரசால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பன்னுனை படுகொலை செய்ய சதி நடந்ததாக கூறப்படுகிறது. இந்திய அரசின் துணையுடன் இந்த படுகொலை சதி நடந்தது என்பதும் குற்றச்சாட்டு. ஆனால் இந்திய அரசு இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதனிடையே பன்னுன் கொலைச் சதியில் தொடர்புடையதாக நிகில் குப்தா என்ற இந்தியர் செக் குடியரசு நாட்டில் கைது செய்யப்பட்டார். செக் குடியரசு நாட்டின் பார்க் சிறையில் நிகில் குப்தா அடைக்கப்பட்டிருந்தார். நிகில் குப்தாவை தங்களிடம் ஒப்படைக்க அமெரிக்கா கோரியது. இதனையடுத்து நிகில் குப்தா, செக் குடியரசு நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் இன்று நிதில் குப்தா ஆஜர்படுத்தப்படுகிறார். நிகில் குப்தா, இந்திய உளவு அமைப்பின் ஏஜெண்ட் என்றும் இந்திய அதிகாரிகளுடன் நிகில் குப்தா தொடர்பில் இருந்தார் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன என்பதும் அமெரிக்காவின் வாதம். இருப்பினும் இந்திய அரசு இதனை நிராகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications