ஆக்ஸிஜன் கட்.. மயங்கி பலியான பயணிகள்.. MH 370 விமானத்தை கடலுக்குள் மூழ்கடித்த பைலட்..
Recommended Video
வாஷிங்டன்: 239 பயணிகளுடன் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எம்ஹெச் 370 விமானம் என்ன கதியானது என்பது பற்றி, தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடலில் விமானத்தை செலுத்தும் முன்பாக பயணிகள் அனைவரையும், விமானி கொலை செய்திருப்பதாக வெளியாகியுள்ள அந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2014ம் ஆண்டு, மார்ச் 8ம் தேதி, மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து, சீன தலைநகர் பீஜிங்கிற்கு, புறப்பட்ட எம்ஹெச் 370 என்ற போயிங் ரக விமானம், எங்கே சென்றது என தெரியாமலேயே மாயமாகிவிட்டது.

முழு தகவல்
5 வருடங்களை தாண்டியும்கூட, மலேசிய விமானத்திற்கு என்ன ஆனது என்பது தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது, சர்வதேச விமானப் போக்குவரத்து சமூகம். உலகின் மிகப்பெரிய விமான மர்மம் வழக்காக இது பார்க்கப்படுகிறது. மாயமான மலேசிய விமானம், எங்கே விழுந்தது, அதில் இருந்த பயணிகள் நிலை என்ன ஆனது என்பது குறித்தெல்லாம் இதுவரை உறுதியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவ்வப்போது விசாரணை மற்றும் யூகங்கள் அடிப்படையில்தான் சில தகவல்கள் வெளியாகியபடி உள்ளன. தற்போது, புதிதாக ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இது அந்த விமானத்தின் பைலட் பற்றியது.

விமானி காரணம்
மலேசிய விமானத்தை இயக்கிய பைலட், ஜஹாரி அகமது ஷா (53), இந்த மொத்த சம்பவத்திற்கு சூத்திரதாரி என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஜஹாரி அகமது ஷாவின் நண்பர்களிடம், விமானத்துறை சார்ந்த நிபுணத்துவ எழுத்தாளர் வில்லியம் லாங்க்கவீஷ் உரையாடி சில தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளார். அந்த தகவல்கள் அதிர்ச்சி ரகம்.

கள்ளத் தொடர்புகள்
ஆம்.. ஜஹாரி அகமது ஷாவுக்கும், விமான பணிப் பெண்கள் சிலருக்கும் கள்ளத் தொடர்புகள் இருந்துள்ளன. இதனால், அவரது மனைவிக்கும், அவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், ஜஹாரி அகமது ஷாவின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதன்பிறகு, தனிமை அறையிலேயே அதிக காலத்தை கழிப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார், ஜஹாரி அகமது ஷா. மன ரீதியாக அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இதெல்லாம் சகஜம்
இதுகுறித்து, ஜஹாரி அகமது ஷாவின் சக பைலட் ஒருவர் கூறுகையில், "ஜஹாரி அகமது ஷா திருமண பந்தம் சரியானதாக அமையவில்லை. கடந்த காலங்களில், விமான பணிப்பெண்கள் பலருடன் அவர் படுக்கையை பகிர்ந்துள்ளார். அதனால் என்ன? நாங்கள் எல்லோருமே செய்வதுதான் இது. பல உலக நாடுகளுக்கும் இந்த இளம் பெண்களை பக்கத்தில் வைத்துக் கொண்டேதானே பறக்கிறோம். இது ஜஹாரி அகமது ஷாவின் மனைவிக்கும் தெரியும்" என்றார்.

பைலட்டுக்கு மன அழுத்தம்
இதுபற்றி வில்லியம் லாங்க்கவீஷ் தான் எழுதியுள்ள கட்டுரையில், கூறுகையில், மலேசிய விமானம் மாயமானது குறித்து விசாரிக்கும், அதிகாரிகள் மற்றும், உளவுத்துறை சமூகத்தினருக்கு, பைலட்டின் மனநிலை குறித்து வலுவான சந்தேகங்கள் உள்ளன. அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி என்கிறார்.

ஆக்ஸிஜன் இணைப்பு
விமானம் 40000 அடி உயரத்தில் பறந்தபோது, கேபினுக்குள் செல்லும், ஆக்ஸிஜன் இணைப்பை பைலட், ஜஹாரி அகமது ஷா துண்டித்துள்ளார். இதையடுத்து, ஆக்ஸிஜன் முகமூடியை பயணிகள் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவை 15 நிமிடங்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்கக் கூடியது. எனவே, பயணிகள் அனைவரும் ஆக்ஸிஜன் இன்றி, அடுத்தடுத்து உயிரிழந்திருக்கிறார்கள். இதன்பிறகு, இந்தியப் பெருங் கடலுக்குள் விமானத்தை செலுத்தி, ஜஹாரி அகமது ஷா தற்கொலை செய்திருக்க கூடும் என்கிறது புதிய ஆய்வு முடிவுகள்.

புதிது கிடையாது
இவ்வாறு பைலட்கள், தற்கொலை செய்வதற்காக, பயணிகளையும் சேர்த்து கொல்வது இது புதிது இல்லை. 1999ம் ஆண்டு அக்டோபர் மாதம், எகிப்து ஏர் விமானத்தின் பைலட், மாசசூசெட்ஸ் பகுதியில், விமானத்தை மோதச் செய்தார். 2015ல், பிரெஞ்சு நாட்டின் ஆல்ப்ஸ் மலையில், ஜெர்மன்விங்ஸ் விமானம் நொறுங்கி விழுந்த சம்பவத்திலும், பைலட்டின் தற்கொலை முயற்சிதான் காரணமாகச் சொல்லப்பட்டது.

மனைவியுடன் சண்டை
ஏம்ப்பா.. பொண்டாட்டி கூட சண்டை போட்டு தற்கொலை செய்வதே தப்பு. இவரு என்னடான்னா, 239 பயணிகளையும் கொன்று, தனது உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளார். இனிமேல், பைலட்டுகள் வீட்டில் சந்தோஷமாக இருக்கிறார்களா என்பதை உளவுத்துறையை வைத்து கண்காணித்து உறுதி செய்தபிறகே, விமானத்திற்குள் காலெடுத்து வைக்கச் சொல்லனும் போல இருக்குதே!












Click it and Unblock the Notifications