தொட்டிலுக்கு பதிலாக மைக்ரோவேவ் ஓவனில் தூங்க வைத்ததால் குழந்தை பலி.. தாய் கைது!
வாஷிங்டன்: தொட்டிலில் குழந்தையை தூங்க வைப்பதாக மைக்ரோவ் ஓவனில் படுக்க வைத்து குழந்தையை கொன்ற தாயை போலீஸார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் மிசோரி மாகாணம் கன்சாஸ் நகரை சேர்ந்தவர் மரியா தாமஸ் (26). இவருக்கு ஒரு மாதத்தில் பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் மரிகா தனது குழந்தையை தொட்டிலில் தூங்க வைக்க நினைத்துள்ளார்.

இதையடுத்து தொட்டிலுக்கு பதிலாக உணவை தயாரிக்கவும் சூடுபடுத்தவும் பயன்படுத்தப்படும் மைக்ரோவேவ் ஓவனில் வைத்துள்ளார். இந்த நிலையில் ஓவன் அப்போது செயல்பட்டுக் கொண்டிருந்தது.
இதனால் குழந்தையின் உடை, அதை தூங்க வைக்க போட்டிருந்த துணி உள்ளிட்டவை அதிக வெப்பத்தால் கருகி எரிந்தது. உடனே கருகிய நாற்றம் வீசியது. இதையடுத்து மரியா வீட்டிலிருந்து கருகிய வாசனை வந்ததை அடுத்து அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார் வீட்டில் மைக்ரோவேவ் ஓவனில் படுகாயங்களுடன் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே குழந்தையை மீட்ட போலீஸார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து குழந்தையின் தாய் மரியா தாமஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மரிகா தாமஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் தூங்க வைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும் என மரியாவின் தோழி போலீஸில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
பெற்ற தாயே குழந்தையை ஓவனில் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மரியாவின் கணவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. மரியாவுக்கு மனநலம் சரியில்லை என்றால் அவருடன் யாராவது இருந்திருப்பார்கள், ஆனால் வீட்டில் யாருமே இல்லை என கூறப்படுகிறது. மரியாவுக்கு உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஒரு வேளை அப்படி ஏதும் இல்லாமல் குழந்தையை கொல்லும் நோக்கத்தில் அவர் கொன்றிருந்தால் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications