"மயான அமைதி.." நிலவுக்கு அருகே சென்றபோது விண்வெளி வீரர்கள் உடனான தொடர்பை இழந்த நாசா.. திக்திக்!
வாஷிங்டன்: அமெரிக்கா நிலவை ஆய்வு செய்ய அனுப்பியுள்ள ஆர்ட்டெமிஸ் II மிஷன் வெற்றிகரமாக இருக்கிறது. இதற்கிடையே இன்று அதிகாலை இந்த ஓரியன் விண்கலத்தில் இருந்த விண்வெளி வீரர்கள் பூமி உடனான தங்கள் ஒட்டுமொத்த தகவல் தொடர்பையும் இழந்தனர். சுமார் 42 நிமிடங்களுக்கு பிறகே அவர்கள் மீண்டும் சிக்னலை பெற்றனர்.
நிலவு குறித்த ஆய்வுகள் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், அமெரிக்கா ஆர்ட்டெமிஸ் IIஐ அனுப்பியது. விண்வெளி வீரர்களோடு நிலவைச் சுற்றி ஆய்வு செய்யும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆர்ட்டெமிஸ் II
நாசாவின் இந்த ஆர்ட்டெமிஸ் II திட்டத்தின் நான்கு விண்வெளி வீரர்கள், அரை நூற்றாண்டுக்குப் பிறகு சந்திரனை மிக அருகில் பறந்து சென்று ஆய்வு செய்கின்றனர். பூமியிலிருந்து சுமார் 406,778 கிலோமீட்டர் தொலைவை அடைந்த அவர்கள், 1970ஆம் ஆண்டு அப்பல்லோ 13 திட்டத்தின் சாதனை தூரத்தை முறியடித்து, நிலவு குறித்த துல்லியமான தகவல்களை அனுப்பி வருகின்றனர். அதாவது பூமியில் இருந்து மிகத் தொலைவுக்குச் சென்ற விண்வெளி வீரர்கள் என்ற சாதனையை இவர்கள் படைத்துள்ளனர்.
சிக்னல் இருக்காது
இந்திய நேரப்படி இன்று அதிகாலை இந்த விண்கலம் நிலவுக்குப் பின்புறம் சென்றது.. அந்த 40 நிமிடங்கள் பூமியுடன் அவர்களுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை. அந்த குறிப்பிட்ட நேரம் அவர்கள் நிலை என்ன.. பாதுகாப்பாக இருக்கிறார்களா என எதையும் பூமியில் உள்ள ஆய்வாளர்களால் கண்காணிக்கவே முடியாது. அவர்கள் பத்திரமாக இருக்க வேண்டும்.. மீண்டும் சிக்னல் கிடைக்க வேண்டும் என்பதே இங்குள்ளவர்களின் பிரார்த்தனையாக இருந்தது.
ஓரியன்
ஓரியன் விண்கலம் நிலவுக்குப் பின்னால் சென்றபோது, பூமியுடனான அதன் தகவல் தொடர்பு சுமார் 42 நிமிடங்கள் துண்டிக்கப்பட்டது. இந்திய அதிகாலை 4:13 மணிக்கு சிக்னல் இழக்கப்பட்டு, அதிகாலை 4:55 மணிக்கு மீண்டும் பெறப்பட்டது. இந்த இடைப்பட்ட நேரத்தில், அதிகாலை 4:32 மணிக்கு நிலவின் மேற்பரப்பிலிருந்து வெறும் 6,550 கி.மீ தொலைவுக்கு மிக நெருக்கமாக இவர்கள் விண்கலம் சென்றுள்ளது. அதன்பின், அதிகாலை 4:35 மணிக்குப் பூமியில் இருந்து இதுவரை இல்லாத அதிகபட்ச தொலைவாக 406,776 கி.மீ தூரத்தை எட்டியது.
சுமார் 7 மணி நேரம் இதுபோல நிலவைச் சுற்றி வந்து முக்கியமான தகவல்களைச் சேகரிப்பார்கள். அதைத் தொடர்ந்து மீண்டும் அவர்கள் பூமி நோக்கிய தங்கள் பயணத்தை ஆரம்பிப்பார்கள். ஓரியன் விண்கலம் "ஃப்ரீ-ரிட்டர்ன் டிராஜெக்டரி" எனப்படும் சிறப்புப் பாதையில் நான்கு நாட்களில் பூமிக்குத் திரும்பும். வரும் சனிக்கிழமை, அதாவது ஏப்ரல் 11ம் தேதி இந்திய நேரப்படி காலை 05:37 மணியளவில் இந்த விண்கலம் பூமிக்குத் திரும்பவுள்ளது. அவர்கள் பசிபிக் பெருங்கடலில் லேண்ட் ஆகும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்தவொரு சிக்கலும் இல்லாமல் திட்டம் சிறப்பாகவே போய்க் கொண்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது
அதிகாலை 4:13 மணி- ஓரியன் விண்கலம் உடனான சிக்னல் இழப்பு
அதிகாலை 4:32 மணி- நிலவில் இருந்து வெறும் 6,550 கி.மீ தொலைவுக்கு விண்கலம் சென்றது
அதிகாலை 4:35 மணி- பூமியில் இருந்து அதிகபட்சமாக 406,776 கி.மீ தூரத்தை விண்கலம் எட்டியது
அதிகாலை 4:55 மணி- மீண்டும் ஓரியன் உடனான சிக்னல் கிடைத்தது












Click it and Unblock the Notifications