"இந்தியாவை இழப்பது அமெரிக்காவுக்கு பேராபத்து.." டிரம்பை நேரடியாக எச்சரிக்கும் பிரபல அமெரிக்க தலைவர்!
வாஷிங்டன்: இந்தியா மீது டிரம்ப் 50% வரி விதித்துள்ள நிலையில், இது இரு நாட்டு உறவுகளைக் கடுமையாகப் பாதிப்பதாக இருக்கிறது. இதற்கிடையே அமெரிக்கா இந்தியா உறவு இப்போது பெரிய சிக்கலில் இருப்பதாகவும் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க விரும்பினால் இந்தியா உடனான உறவு அமெரிக்காவுக்கு ரொம்பவே முக்கியம் என்றும் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியின் முக்கிய தலைவரான நிக்கி ஹேலி கூறியிருக்கிறார்.
ரஷ்ய எண்ணெய் வாங்குவதாகச் சொல்லி டிரம்ப் இந்தியா மீது 50% வரியை விதித்துள்ளார். இது இரு நாட்டு உறவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்தியா உடனான இடையேயான மோதல் அமெரிக்காவுக்கு நல்லதல்ல என்று ஐநாவின் மாஜி அமெரிக்கத் தூதரும் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியின் முக்கிய தலைவருமான நிக்கி ஹேலி எச்சரித்துள்ளார்.

டிரம்ப்பிற்கு எச்சரிக்கை
இது தொடர்பாக அவர் பிரபல அமெரிக்க ஊடகத்தில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். வரிகள் மற்றும் ரஷ்ய எண்ணெய் குறித்த மோதல்கள் உலகின் இரு பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையே ஒரு பிளவை ஏற்படுத்தக்கூடாது என்றும் டிரம்ப் இதை அனுமதிக்கக் கூடாது என்று ஹேலி வலியுறுத்தினார். அவர் மேலும், "அமெரிக்கா மிக முக்கியமானது எதை என்பதை மறந்துவிடக் கூடாது.. நமது இலக்குகளில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.. சீனாவை எதிர்கொள்ள, அமெரிக்காவுக்கு இந்தியா என்ற நண்பர் தேவை.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது புதினின் உக்ரைன் போருக்கு நிதி திரட்ட உதவுகிறது என்று டிரம்ப் சொல்வது உண்மை தான். ஆனால், அதற்காக இந்தியாவை ஒரு எதிரியாகக் கருத முடியாது.. ஆசியாவில் சீன ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு தடுப்பு சக்தியாகச் செயல்படக்கூடிய ஒரே நாடாக இந்தியா இருக்கிறது. எனவே, கடந்த 25 ஆண்டுகளாக நாம் வளர்த்தெடுத்த உறவைச் சிதைப்பது பேரழிவாக இருக்கும்.
அத்தியாவசியம்
அமெரிக்காவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு இலக்குகளுக்கு இந்தியா அத்தியாவசியமானது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நட்பு நாடுகளுடன் இந்தியாவின் பாதுகாப்பு உறவுகள் அதிகரித்து வருவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சுதந்திர உலகின் பாதுகாப்புக்கு ஒரு முக்கியமான சொத்தாக இந்த உறவுகளை நாம் கருதலாம்.
நீண்ட கால நோக்கில், சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பிறகு இந்தியாவின் வளர்ச்சி மிக முக்கியமான புவிசார் அரசியல் வளர்ச்சியாக இருக்கலாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவின் வளர்ச்சியும் பவரும் அதிகரிக்கும்போது சீனாவின் ஆதிக்கம் சுருங்கும். இதனால் இந்தியாவை எதிரியாக நாம் கருதக்கூடாது.

டிரம்ப்- நரேந்திர மோடி பேச்சுவார்த்தை
இந்தச் சூழலை நாம் உடனடியாகச் சரி செய்ய வண்டும்.. டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்போது எல்லாப் பிரச்சனையும் சரியாகிவிடும். நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சீனா இந்தப் பிளவை பயன்படுத்திக் கொள்ளும். ஒரு வர்த்தக தகராறை ஒரு பெரிய முறிவாக மாற்றுவது தவறு. அதை அனுமதிக்கக் கூடாது" என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
எதிரி இல்லை
மேலும், 1982இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன், இந்திரா காந்தியிடம் கூறிய வார்த்தைகளை ஹேலி தனது உரையில் மேற்கோள் காட்டினார். அதாவது அமெரிக்காவும் இந்தியாவும் சில சமயங்களில் தனித்தனிப் பாதைகளில் பயணித்தாலும், அவற்றின் இலக்கு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று ரீகன் கூறியிருந்தார்.. எது தனக்கு முக்கியமானது என்பதை அமெரிக்கா மறந்துவிடக்கூடாது என்ற அவர், சீனாவை எதிர்கொள்ள, இந்தியா என்ற ஒரு நண்பர் அமெரிக்காவுக்குத் தேவை என்றும் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications