"24*7 கண்காணிப்பு.." டிரம்ப் போட்ட புதிய உத்தரவு.. அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு பயங்கர சிக்கல்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கான ரூல்ஸ்களை டிரம்ப் தொடர்ந்து கடுமையாக்கி வருகிறார். இதனால் அமெரிக்காவில் இருப்பதே வெளிநாட்டினருக்குச் சிரமமானதாக மாறி வருகிறது. இதற்கிடையே டிரம்ப் அரசு இப்போது புதிய ரூல்ஸை அறிவித்துள்ளது. இந்த புதிய ரூல்ஸ் 24*7 அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு செக் வைப்பதாகவே இருக்கிறது.
அமெரிக்க அதிபராகத் தேர்வான டிரம்ப் குடியேற்றம் சார்ந்து கடுமையான விதிகளை அமல்படுத்தி வருகிறார். டிரம்ப் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறுவோரை அகற்றுவேன் எனச் சொல்லியே ஆட்சியைப் பிடித்தார். அதையே தான் அவர் செய்து வருகிறார். அதேநேரம் அவரது ரூல்ஸ் சட்டவிரோதமாகக் குடியேறுவோர் மட்டுமின்றி சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்களையும் பாதிப்பதாக இருக்கிறது.

டிரம்ப் புதிய உத்தரவு
இதற்கிடையே டிரம்ப் நிர்வாகம் இப்போது புதிய ரூல்ஸை அறிவித்துள்ளது. அதாவது அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினர் அனைவரும் எப்போதும் ஐடி கார்டை கையிலேயே வைத்திருக்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதாவது அதிகாரிகள் கேட்கும்போது சட்டப்பூர்வமாகவே அமெரிக்காவில் இருக்கிறார்கள் என்பதைக் காட்டும் வகையிலான ஐடி கார்டை கையில் வைத்திருக்க வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
படையெடுப்பில் இருந்து அமெரிக்கர்களைப் பாதுகாப்பது என்று டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவை டிரம்ப் கையெழுத்திட்டிருந்த நிலையில், அதன் ஒரு பகுதியாகவே கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுக்கவும் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்போரைக் கண்டறிந்து நாடு கடத்துவதே இந்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.. இதன் காரணமாகவே ஒருவர் சட்டப்பூர்வமாகவே அமெரிக்காவில் தங்கியிருக்கிறார் என்பதை உறுதி செய்ய கையில் எப்போதும் ஐடி கார்டை வைத்திருக்க வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

புதிய சட்டம்
1940ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வேற்றுக்கிரகவாசிகள் பதிவுச் சட்டத்திலிருந்து இந்த ரூல்ஸ் உருவாகியிருக்கிறது. அந்த குறிப்பிட்ட சட்டம் அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினர் அனைத்தும் நிச்சயம் பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இருப்பினும், அந்தச் சட்டம் இதுவரை செயல்படுத்தப்படாமலேயே இருந்தது. ஆனால், டிரம்ப் நிர்வாகம் இப்போது புலம்பெயர்ந்தோருக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் சூழலில், இந்த உத்தரவு வந்துள்ளது.
இந்த புதிய ரூல்ஸ் வெளிநாட்டினர் தங்கள் இருப்பதைப் பதிவு செய்வதைக் கட்டாயப்படுத்துகிறது. அமெரிக்காவில் 30 நாட்கள் அல்லது அதற்கு மேல் தங்கியிருக்கும் 14 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டினர் அனைவரும் "படிவம் G-325R"ஐ பயன்படுத்தி நிச்சயம் அரசில் பதிவு செய்ய வேண்டும். 14 வயதுக்குட்பட்டவர்கள் என்றால் அவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காகப் பதிவு செய்ய வேண்டும். அவர்கள் 14 வயதைக் கடந்தவுடன் 30 நாட்களில் மேஜராக பதிவு செய்து, கைரேகையையும் சமர்ப்பிக்க வேண்டும்.
கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்
ஏப்ரல் 11ம் தேதி அல்லது அதற்குப் பிறகு அமெரிக்கா வருவோர் அனைவரும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யத் தவறுவோர் மீது அபராதம், சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். பதிவு செய்யும்போது எங்கே தங்கி இருக்கிறார்கள் உட்பட எல்லா விவரங்களையும் பதிவிட வேண்டும். அதில் எந்த இடத்தில் தங்குகிறீர்கள் என்ற விவரத்தையும் பதிவிட வேண்டும். ஒருவேளை நீங்கள் தங்கும் முகவரியை மாற்றினால் 10 நாட்களுக்குள் அது குறித்துத் தெரிவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் $5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறியவே இந்த ரூல்ஸ் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்கள் எப்போதும் ஐடி கார்டை வைத்திருக்க வேண்டும் என்பதால் ஐடி கார்டு இல்லாதவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகவே கருதப்படுவார்கள். இதன் காரணமாகவே சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்கள் ஐடி கார்டை கையிலேயே வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஹெச் 1பி விசா உள்ளிட்ட உரிய விசாக்கள் அல்லது கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் மீண்டும் படிவத்தை நிரப்ப வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், அவர்கள் எல்லா நேரங்களிலும் ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும்.

24*7 ஆவணம் வேண்டும்
24*7 ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும் என்பது அங்குள்ள வெளிநாட்டினரை நிச்சயம் பாதிக்கும். அமெரிக்காவில் இப்போது சுமார் 54 லட்சம் இந்தியர்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. அதில் சுமார் 2.20 லட்சம் பேர் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள். அவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தவர்கள் என்பதால் எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம். சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் இருக்கும் 52 லட்சம் பேருக்குச் சிக்கல் இல்லை என்றாலும், ஐடி கார்ட் எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும்.
இந்த விதிகளைப் பின்பற்ற தவறுவோர் மீது அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். அதேநேரம் பதிவு செய்யும்போது எல்லா டாக்குமெண்ட்டுகளையும் உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும். உரிய டாக்குமெண்ட்டுகளை சமர்ப்பிக்கத் தவறுவோர் நாடுகடத்தலை எதிர்கொள்ள நேரிடும்.
தீவிரமாகும் கட்டுப்பாடுகள்
இது தொடர்பாக உள்துறை செயலாளர் கிறிஸ்டி நோயம் கூறுகையில், "18 வயதைத் தாண்டிய வெளிநாட்டினர் பதிவுச் சான்றை எல்லா நேரங்களிலும் எடுத்துச் செல்ல வேண்டும். இந்தச் சட்டத்திற்கு முன்னுரிமை அளித்து நடைமுறைப்படுத்துவோம். இந்த ரூல்ஸிற்கு இணங்காதவர்கள் அமெரிக்காவில் இருக்க முடியாது.

இது மட்டுமின்றி டிரம்ப் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளைத் தீவிரமாக்கி வருகிறது. சமீபத்தில் தான் அமெரிக்காவில் புகலிடம் கோருவோரின் சமூக வலைத்தளக் கணக்குகளை ஆய்வு செய்யும் சட்டம் அங்கு நடைமுறைக்கு வந்தது. அதாவது ஒருவரின் புகலிடக் கோரிக்கையைப் பரிசீலிக்கும் முன்பு, அவரது சமூக வலைத்தளக் கணக்கை முழுமையாக செக் செய்வார்களாம். அதில் யூத விரோத போஸ்ட்கள் எதாவது இருந்தால் புகலிடக் கோரிக்கை மறுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
விசா உதவி அலுவலகம் மூடல்
அதேபோல அமெரிக்காவில் சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்களுக்கு விசா உதவிகளை வழங்கி வந்த சிஐஎஸ் அலுவலகத்தையும் டிரம்ப் மூடியிருந்தார். விசா சார்ந்த புகார்களில் சுமார் 15% வரை இந்த சிஐஎஸ் அலுவலகம் தான் கையாண்டு வந்தது. அந்த அலுவலகத்தையும் டிரம்ப் தடாலடியாக மூட உத்தரவிட்டிருந்தார்.
மேலும், முன்பெல்லாம் கிரீன் கார்டு வாங்கிவிட்டால் அமெரிக்காவில் தங்க எந்தவொரு பிரச்சினையும் இருக்காது என்ற சூழல் இருந்தது. ஆனால், டிரம்ப் நிர்வாகம் அதையும் மாற்றி வருகிறது. அதாவது க்ரீன் கார்ட்டே வைத்திருந்தாலும் கூட ஓவர்ஸ்பீட் உள்ளிட்ட சிறு விதிமீறல்களில் சிக்கியவர்களுக்கும் கூட வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது அமெரிக்க அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கிறார்கள். இதனால் தேவையற்ற வெளிநாட்டுப் பயணத்தையே தவிர்க்குமாறு அங்குள்ள குடியேற்ற வழக்கறிஞர்கள் அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications