ஆயிரக்கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் ஆரக்கிள்! எல்லாத்துக்கும் இந்த AI தான் காரணம்!
வாஷிங்டன்: ஆரக்கிள் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிக அளவில் முதலீடுகளை செய்திருக்கிறது. இதன் காரணமாக ஏற்பட்டிருக்கும் நிதி சுமையை சமாளிக்க, ஊழியர்களை வேலையை விட்டு நீக்க முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓபன்ஏஐ உடனான 300 பில்லியன் டாலர் ஒப்பந்தம், ஆரக்கிள் நிறுவனத்தை பெரிய கடன் சுமையில் தள்ளியிருக்கிறது. எனவே நிலைமையை சமாளிக்க வேலை நீக்கத்தை கையில் எடுத்திருக்கிறது.

இந்த பணிநீக்கங்கள் பல வணிகப் பிரிவுகளை பாதிக்கும் எனவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் தேவைப்படாது என கருதப்படும் சில பதவிகளும் இதில் அடங்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும், கிளவுட் பிரிவில் புதிய பணியமர்த்தலை நிறுத்தியுள்ள ஆரக்கிள், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கவும் மறுத்திருக்கிறது.
நிதி நெருக்கடி மற்றும் முதலீடுகள்
ஆரக்கிள் நிறுவனம் கடந்த 2 மாதங்களில் 58 பில்லியன் டாலரை கடன் பெற்றிருக்கிறது. இதில் 38 பில்லியன் டாலர் டெக்சாஸ் மற்றும் விஸ்கான்சினில் உள்ள தரவு மையங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது. மேலும், 20 பில்லியன் டாலர் நியூ மெக்ஸிகோவில் உள்ள ஒரு பெரிய வளாகத்திற்கு செலவிடப்பட்டுள்ளது.
ஆரக்கிள் தலைவர் லாரி எலிசன், நிறுவனத்தை பாரம்பரிய தரவுத்தள மென்பொருள் நிறுவனத்திலிருந்து, AI கிளவுட் போட்டியாளராக மாற்ற முயற்சிக்கிறார். இதற்காக, 156 பில்லியன் டாலர் மூலதனச் செலவு தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
பங்கு விலை மற்றும் சந்தை நிலை
ஆரக்கிள் பங்கு விலை, 2024 ஆம் ஆண்டில் 61% லாபத்தையும் கடந்த ஆண்டில் 20% லாபத்தையும் ஈட்டியது. ஆனால் கடந்த செப்டம்பரில் உச்சத்தை எட்டிய பிறகு, பங்குகள் 54% சரிந்துள்ளன. இதனால் சுமார் 463 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு இழக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுக்கான முதலீடுகளின் பணத்தேவைகள் காரணமாக தொழில்நுட்பத் துறையில் பணிநீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களும் இதேபோன்ற நெருக்கடியை சந்தித்துள்ளன. சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டில் ஆயிரக்கணக்கான வேலைகளை நீக்கியது.
அமெரிக்க வங்கிகள் மற்றும் வட்டி விகிதம்
பல அமெரிக்க வங்கிகள், ஆரக்கிள் தொடர்பான தரவு மையங்களுக்கு நிதி கொடுப்பதிலிருந்து பின்வாங்கியுள்ளன. செப்டம்பர் மாதம் முதல் ஆரக்களின் கடனுக்கான வட்டி விகித பிரீமியங்கள் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளன.
புதிய வாடிக்கையாளர்கள் ஒப்பந்த மதிப்பில் 40% வரை முன்பணம் செலுத்த வேண்டும் என ஆரக்கிள் கட்டாயப்படுத்துவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், செர்னர் என்ற சுகாதார மென்பொருள் பிரிவை விற்க யோசித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications