அத்துமீறும் டிரம்ப்? வாசனை திரவியம் வைத்திருந்த இந்தியர் கைது.. நாடுகடத்த ரெடியாகும் அமெரிக்கா?
வாஷிங்டன்: அமெரிக்காவில் சாதாரண வாசனைத் திரவியம் வைத்திருந்த ஒரே காரணத்திற்காக இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் ஒரு மாதத்திற்கு மேல் சிறையில் இருந்த அவர், இப்போது நாடுகடத்தப்படும் சிக்கலையும் எதிர்கொண்டுள்ளார். இந்தியரான அவருக்கு என்ன நடந்தது.. அவர் எதிர்கொள்ளும் பிரச்சினை என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
டிரம்ப் வந்த பிறகு அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். போலீசார் தவறாக எடுக்கும் நடவடிக்கைகளால் கூட இவர்களே கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். அப்படித் தான் இப்போது அமெரிக்க வாழ் இந்தியரான கபில் ரகு சிக்கலில் மாட்டி நாடுகடத்தல் சிக்கலை எதிர்கொண்டுள்ளார்.

அமெரிக்க இந்தியர்
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் கபில் ரகு.. இந்தியரான இவர் அமெரிக்கர் ஒருவரைத் திருமணம் செய்த கொண்டுள்ளார். இதனால் இவர் அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெறும் முயற்சியில் இறங்கியிருந்தார். அமெரிக்க போலீசார் இவரை தவறாகக் கைது செய்தது மட்டுமின்றி, இதனால் நாடு கடத்தும் ஆபத்திலும் தள்ளப்பட்டுள்ளார்.
அதாவது ரகு சாலையில் சென்று கொண்டிருந்த போது சிறிய சிறிய போக்குவரத்து விதிமீறலுக்காக போலீசார் இவரது காரை நிறுத்தியுள்ளனர். அப்போது, அவரது காரில் "ஓபியம்" என லேபிள் செய்யப்பட்ட ஒரு சிறிய பாட்டிலைக் கண்டுபிடித்த போலீசார், அது தடை செய்யப்பட்ட போதைப்பொருள் எனக் கருதினர். அது போதைப்பொருள் இல்லை.. சாதாரண வாசனைத் திரவியம் என ரகு விளக்கினார். இருப்பினும், ரகு விளக்கத்தைக் கேட்காமல் போலீசார் அவரை கைது செய்தனர்.
வாசனைத் திரவியத்திற்குக் கைது
அப்போது போலீசார் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்த கேமராவில் இது தொடர்பான வீடியோ பதிவாகியுள்ளது. அதில் காரை சோதனை செய்யும் போலீசார், அந்தப் பாட்டிலைப் பார்த்தவுடன், "உனது காரில் போதைப்பொருள் இருக்கிறது" என்கிறார்கள். ரகு அது போதைப்பொருள் இல்லை.. வாசனைத் திரவியம் தான் எனச் சொன்னாலும் அதைக் கேட்காமல் போலீசார் கைது செய்தனர். கடந்த மே மாதம் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
உணவு டெலிவரி செய்து கொண்டிருந்த ரகு திடீர் கைதால் குழம்பிப் போய்விட்டார். தான் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியதாகவும், இந்தக் கைது தன்னை குழப்பமடையச் செய்ததாகவும் கூறினார். ரகு காரில் இருந்து கைப்பற்றப்பட்ட பாட்டிலை போலீசார் சோதனைக்கு அனுப்பினர். அதில் இருந்தது வாசனைத் திரவியம்தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
சிறை வாசம்
இருப்பினும், ரகு அங்குள்ள சிறையில் மூன்று நாட்கள் இருக்க வேண்டி இருந்தது. அப்போது அவரது விசாவிலும் பிரச்சினை இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். அவரது விசா காலம் முடிந்துவிட்டதாகக் கூறி, அவரது குடியேற்ற ஆவணங்களில் இருக்கும் சிக்கலை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இருப்பினும், விசா காலம் முடிந்தது போலத் தோன்றுவது "நிர்வாகப் பிழை" என்று ரகுவின் வழக்கறிஞர் மைக் லாக்ஸ் குறிப்பிட்டார்.
நாடுகடத்தல் அபாயம்!
ஆனாலும், ரகுவுக்கு சிக்கல் தீரவில்லை.. லூசியானாவில் உள்ள ஒரு பெடரல் சிறைக்கு ரகு மாற்றப்பட்டார். அங்கு குடியுரிமை அதிகாரிகள் அவரை 30 நாட்கள் சிறையில் அடைத்தனர். மே 20ம் தேதியே போதைப்பொருள் குற்றச்சாட்டு கைவிடப்பட்ட போதிலும், ரகுவின் விசா ரத்து செய்யப்பட்டது. இதனால் ரகு அமெரிக்காவில் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் நாடுகடத்தப்படலாம் என்ற சூழலிலேயே இருக்கிறார். இனி சிறு விதிமீறல் செய்தாலும் நாடுகடத்தப்படும் சூழலுக்கு ரகு தள்ளப்பட்டுள்ளார்.
இதில் முக்கியமான பிரச்சினை என்னவென்றால் ரகுவின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவரால் வேலை செய்ய முடியாது. இதனால் அவர்களின் குடும்பத்தின் வருமானம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாம். மேலும், இந்த வழக்கு தொடர்பான செலவுகள் அதிகரிப்பதால் மிக மோசமான நிலையில் தனது குடும்பம் இருப்பதாக அவர் கூறினார்.
ரகு வேதனை
ரகு மேலும் கூறுகையில், "எனது குடும்பம் இதனால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனது குழந்தை அழுது கொண்டே இருக்கிறார். பைபிளை கையில் வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் எனக் கேட்டு ஒவ்வொரு நாளும் இரவு அழுகிறார். என் மனைவி (அலெக்ஸ் மேஸ்) கார்கள் மற்றும் சொத்துகளை விற்றுவிட்டு வேறு நாட்டிற்குப் போய்விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார்" என்றார்.












Click it and Unblock the Notifications