கூகுள் உள்பட அமெரிக்காவின் டாப் "டெக்" நிறுவன சிஇஓக்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு.. பேசியது என்ன?
வாஷிங்டன்: மூன்று நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். நியூயார்க்கில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றிய மோடி, அதன்பிறகு அமெரிக்காவின் முன்னணி தொழில் நுட்ப நிறுவன சிஇஓக்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு அமெரிக்காவிற்கு முதல் முறையாக நேற்று முன் தினம் புறப்பட்டு சென்றார். குவாட் உச்சி மாநாடு, ஐ.நா. பொதுச்சபை கூட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இந்த பயணம் அமைந்து இருந்தது. இதில் குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சொந்த மாகாணமான டெலவரில் நடந்த இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அப்போது, குவாட் கூட்டமைப்பு தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து நியூயார்க் சென்ற மோடி, அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் ஏராளமான அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, "உங்கள் அன்பு எனது அதிர்ஷ்டம்" என அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் கூறினார்.
அதன்பிறகு நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி, பாலஸ்தீனிய அதிபர் மஹ்மூத் அப்பாஸ், ஆகியோரையும் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள முன்னணி தொழில் நுட்ப நிறுவனங்களுடன் பிரதமர் மோடி இன்று ரவுண்ட் டேபிள் எனப்படும் வட்ட மேஜை மாநாடு நடத்தினார். நியூயார்க்கில் உள்ள லாட்டே பாலேஸ் ஹோட்டலில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்துறை சந்தையில் புதுமை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எம்.ஐ.டி ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்த இந்த வட்ட மேஜைக் கூட்டத்தில், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், செமி கண்டக்டர் மற்றும் பயோடெக்னாலஜி துறையில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூகுள் நிறுவனத்தின் சி இ ஒ சுந்தர் பிச்சை, நிவிடியா நிறுவனத்தின் ஜென்சென் ஹூவாங் மற்றும் அடோப் நிறுவனத்தின் சாந்தனு நரயேன் ஆகியோரும் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications