இந்தியாவுக்கே போலாமா? இல்ல இங்கயே ஓரஞ்சாரமா தொழில் பண்ணலாமா? ட்ரம்பால் புலம்பும் யூஎஸ் இந்தியர்கள்.!
வாஷிங்டன்: அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசியது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அமெரிக்காவில் சட்ட விரோதமாக வசிக்கும் இந்தியர்களை திரும்ப பெற தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருப்பது அமெரிக்க வாழ் இந்தியர்கள் சிலரை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்ற பிறகு, அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு அவர்களை அவரவர் நாடுகளுக்கே அனுப்பும் நடவடிக்கை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி வசித்து வந்ததாக இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பலர் ராணுவ விமானத்தில் அவரவர் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை ஹரியானா, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 33 பேர், பஞ்சாப்பை சேர்ந்த 30 பேர், உத்தர பிரதேசம் மற்றும் மராட்டிய மாநிலங்களைச் சேர்ந்த மூன்று பேர், சண்டிகரைச் சேர்ந்த இரண்டு பேர் என மொத்தம் 104 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை காலை டெக்ஸாஸிலிருந்து ஸ்ச்- 17 ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த 4ஆம் தேதி அந்த விமானம் இந்தியாவில் தரையிறங்கியது.
இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்கள் கைகள் கால்களில் விலங்குகள் பூட்டப்பட்டு கைதிகள் போல விமானத்தில் அழைத்து வரப்பட்டதாக செய்திகள் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும், 487 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்கா திட்டமிட்டு இருக்கிறது.
இந்த நிலையில் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகள் இந்தியர்களுக்கு எதிராக இருப்பதாகவே குற்றம் சாட்டப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி உடன் நட்பு கொண்டிருந்தாலும் இந்தியர்கள் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பறிக்கிறார்கள் எனக் கூட பேசி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வெள்ளை மாளிகையில் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேசினார்.
வர்த்தகம், வரி விதிப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி ஆகியவை குறித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் வரிவிதிப்பு குறித்து பேசிய ட்ரம்ப்," இந்தியா எவ்வளவு வரி விதிக்கிறதோ அதே அளவு வரியை நாங்களும் விதிப்போம் என கூறி இருந்தார். இதற்கிடையே சட்ட விரோத குடியேறிய இந்தியர்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக வசிக்கும் இந்தியர்களை திரும்ப பெற தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சட்ட விரோதமாகவும் அல்லது போலிப் பணி மூலமாக அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மீண்டும் நாடு கடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல இந்தியர்கள் இந்த அறிவிப்பால் அச்சத்தில் உறைந்துள்ளனர். உரிய ஆவணங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட சில விதிமுறைகள் காரணமாக தாங்கள் வெளியேற்றப்படலாம் என்பதால் அவர்கள் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications