அமெரிக்க அதிபர் டிரம்பின் விளம்பர மோகம்... நிவாரண நிதி காசோலைகளில் தனது பெயரை பொறிக்க உத்தரவு
வாஷிங்டன்: அமெரிக்காவில் அரசால் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதி காசோலைகளில் தனது பெயரை பொறிக்க உத்தரவிட்டுள்ளார் டிரம்ப்.
இதனால் பயனாளிகளுக்கு காசோலைகள் அனுப்பப்படும் பணிகளில் தேவையின்றி கால தாமதம் ஏற்படக்கூடும் என்றும், இது டிரம்பின் விளம்பர மோகத்தை காட்டும் வகையில் உள்ளது எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு சாதகமான வியூகங்களை டிரம்ப் இப்போதே அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே டிரம்பின் புதிய உத்தரவால் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட காசோலைகளில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் கருவூல துறையினர். இருப்பினும் அதனை வெளிப்படையாக கூறத் தயங்கும் கருவூல அதிகாரிகள் இந்த நடவடிக்கையால் நிவாரண நிதி பயனாளிகளுக்கு சென்று சேர்வதில் எந்த தாமதமும் ஏற்படாது எனக் கூறுகின்றனர்.
மேலும்,அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தில் அந்நாட்டு அதிபர் ஒருவரின் பெயர் இடம்பெறுவது இதுவே முதற்முறையாகும். கொரோனா வைரஸ் தாக்கத்தால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு இரண்டு ட்ரில்லியன் டாலர்கள் நிவாரண தொகுப்பு திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவி காசோலை மூலம் அளிக்கப்படுகிறது.
அதன்படி ஆண்டுக்கு $75,000-க்கு (டாலர்) குறைவாக வருமானம் உடைய ஒருவருக்கு $1,200(டாலர்) நிவாரண நிதி அமெரிக்காவில் தரப்படுகிறது. இதேபோல் கணவன் மனைவி ஆகிய இருவரும் பணிபுரிபவர்களாக இருந்து அவர்களுடைய ஆண்டு வருமானம் $150,000 (டாலர்) குறைவாக இருந்தால் அவர்களுக்கு $2,400 டாலர்) நிவாரண நிதிஅளிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications