"130 டிகிரி வெப்பம்.." பாலைவனமாகும் நகரங்கள்.. சுருண்டு விழும் பொதுமக்கள்! நிலைமை ரொம்பவே மோசம்
வாஷிங்டன்: அமெரிக்கா முதல் ஜப்பான் வரை உலகின் பல நாடுகளிலும் வெப்பம் புதிய உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அங்கே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் என்பது இப்போது நம்மை பாடாய் படுத்தி வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலம் முன்பைவிட வெப்பமான ஒன்றாக மாறி வருகிறது. இதனால் உலகெங்கும் பாதிப்பு இருக்கவே செய்கிறது.

இதற்கிடையே புவி வெப்ப மயமாதல் காரணமாகப் பல லட்சம் பேர் மிகவும் ஆபத்தான நிலைக்கு இப்போது தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஐரோப்பா, ஜப்பான், அமெரிக்கா நாடுகளில் இருக்கும் பல லட்சம் பேருக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
வெப்பம்: அமெரிக்காவில் கலிபோர்னியா முதல் டெக்சாஸ் வரை பல இடங்களில் சக்திவாய்ந்த வெப்ப அலை உச்சம் தொட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் வெப்பம் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாகப் பகல் நேரத்தில் வெளியே கூட செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் உச்சத்தில் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கே பல இடங்களில் வெப்பம் 115, 116 டிகிரி பாரன்ஹூட்டை கூட எட்டியுள்ளது.
பூமியின் வெப்பமான இடங்களில் ஒன்றாக அறியப்படும் கலிபோர்னியாவின் டெத் வேலி என்ற இடத்தில் வெப்பம் புதிய உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கே வெப்பம் 130 டிகிரி பாரன்ஹூட் வரை செல்ல வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். ஏற்கனவே அங்கே இப்போது 119 டிகிரி வரை வெப்பம் நிலவும் நிலையில், இது மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகள்: வெப்பம் மிக மோசமாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நகரங்களிலும் பாலைவனத்தைப் போல இந்தளவுக்கு வெப்பம் உச்சம் தொடுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். சில இடங்களில் உயிரிழப்புகளும் பதிவாகும் என்று அஞ்சப்படுகிறது.
அமெரிக்கா மட்டுமின்றி பல ஐரோப்பிய நகரங்களிலும் வெப்பம் உச்சத்தைத் தொடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரோம், போலோக்னா மற்றும் புளோரன்ஸ் உள்ளிட்ட 16 நகரங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் அதிகபட்சமாக சிசிலி மற்றும் சர்டினியா தீவுகள் 48C வரை வெப்பம் செல்லும் என்றும் வார்னிங் பறந்துள்ளது. ஜப்பான் நாட்டில் கூட வெப்பம் உச்சம் தொட்டுள்ளது.
எச்சரிக்கை: இப்படி உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பம் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. எல் நினோ விளைவு காரணமாக அடுத்த சில ஆண்டுகளுக்கு வெப்பம் இப்படி அதிகமாகவே இருக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தாண்டு கோடை வெப்பமே உச்சத்தில் இருந்த நிலையில், வரும் ஆண்டுகளில் வெப்பம் மேலும் அதிகமாக இருக்கும் என்ற வார்னிங் வந்துள்ளது.
புவி வெப்ப மயமாதலும் பருவநிலை மாற்றமும் பூமியில் இப்போது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உலக நாடுகள் சொன்னாலும் கூட, யாரும் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இதனால் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications