நோ சிக்னல் லைட்ஸ்.. புதுமையான சாலை.. ஆனந்த் மகிந்திரா பகிர்ந்த வீடியோ.. ஆனால் பல சிக்கல் இருக்கே!
போக்குவரத்து சிக்னல்கள் இல்லாமலேயே டிராபிக் இன்றி சாலையில் வாகனங்கள் செல்லும் வகையிலான சாலை வடிவமைப்பு பற்றிய ஒரு வீடியோவை பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
வாஷிங்டன்: போக்குவரத்து சிக்னல்கள் இல்லாமலேயே டிராபிக் இன்றி சாலையில் வாகனங்கள் செல்லும் வகையிலான சாலை வடிவமைப்பு பற்றிய ஒரு வீடியோவை பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் கலவையான விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி சுவாரசியமான தகவல்களையும் புதுமையான கண்டுபிடிப்புகள் பற்றியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருவார்.
சுவாரசியமான துணுக்குகள், தன்னம்பிக்கையூட்டும் வகையிலான கருத்துக்கள், வீடியோக்கள், அசாத்திய திறமைகள் உள்ளிட்டவற்றை தனது ட்விட்டர் பதிவில் ஆனந்த் மகிந்திரா பதிவிடுவார்.

ஆனந்த் மகிந்திரா பகிர்ந்த வீடியோ
ஆனந்த் மகிந்திராவின் பதிவுகள் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தில் அதிகம் பகிரப்படும். கடந்த 23 ஆம் தேதி ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டர் போக்குவரத்து சிக்னல்கள் இன்றியே டிராபிக் இன்றி சாலையில் வாகனங்கள் செல்லும் வகையிலான சாலை வடிவமைப்பு பற்றிய ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். ஏமன் நாட்டைச் சேர்ந்த என்ஜினியரான முகம்மது அவாஸ் என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வடிவமைத்த இந்த சாலை கட்டமைப்பு குறித்த வீடியோவை ஆனந்த் மகிந்திரா பதிவிட்டு இருந்தார்.

ரவுண்டானா வடிவில்..
சில நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் கூட சிக்னல்கள் எதுவும் இல்லாமல் வாகனங்கள் செல்லக்கூடிய வகையிலான வடிவமைப்பு காட்சி இடம் பெற்றுள்ளது. சாலைகளில் அமைக்கப்படும் ரவுண்டானா வடிவிலான இந்த வடிவமைப்பு காட்சியில் நான்கு திசைகளில் இருந்து வரும் வாகனங்களும் எந்த சிரமமும் இன்றி தாங்கள் செல்ல வேண்டிய சாலையை பிடித்து செல்லும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

டிராபிக் சிக்னல்கள் இன்றியே
இத பகிர்ந்து இருந்த ஆனந்த் மகிந்திரா கேப்ஷனாக , ஏமன் நாட்டை சேர்ந்த முகம்மது அவாஸ் என்ற என்ஜினியர் உருவாக்கிய அற்புதமான வடிவமைப்பு இது. டிராபிக் சிக்னல்கள் இன்றியே அரை சுற்றுப்பாதைகளை கொண்டு போக்குவரத்து தொடர்ந்து ஒழுங்குபடுத்தும் வகையில் உள்ளது. ஆனல், எரிபொருள் பயன்பாடு ஆகாதா? என்று பதிவிட்டு இருந்தார். ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

நெட்டிசன்கள் கலகல கருத்து
இந்தியா போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடுகளில், சிக்னல்களில் காத்திருந்து பல நிமிடங்களை இழக்க வேண்டியுள்ளது. இதனால், இதுபோன்ற வடிவமைப்புடன் சாலைகளை வடிவமைப்பது மணிக்கணக்கில் காத்திருப்பதை குறைக்க உதவும் என சில நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர். அதேவேளையில், நடைமுறைக்கு பயன்படுமா? என்று சந்தேகங்களும் கிளப்பியுள்ளனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், இந்த மாடல் திறனற்றது. ஏனெனில், அதிக எரிபொருள் பயன்பாடு ஆவதோடு கூடுதல் நேரமும் ஆகும். சிக்னல்களை விட அதிக விபத்துக்கள் இது போன்ற சுற்றுப்பாதைகளால் தான் ஏற்படுவதை புள்ளி விவரங்களும் சொல்கின்றன'என்று பதிவிடுள்ளார்.

நேரம் மிச்சம் ஆகும் என்றால்
மற்றொரு நெட்டிசன் பதிவிடுகையில், "சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் மிச்சம் ஆகும் என்றால் அதிக எரிபொருள் பயன்பாடு ஒரு விஷயமாக இருக்காது" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல், சில நெட்டிசன்கள் சாலையில் வாகனங்களே இல்லையென்றாலும் கூட தேவையின்றி அதிக நேரம் சுற்ற வேண்டியிருக்கும். இது வாகன ஓட்டிகளை மேலும் சிரமத்திற்கே உள்ளாக்கும். எனவே இதற்கு பதிலாக மல்டி லெவல் மேம்பாலங்கள் அமைப்பதே சிறந்தது என்றும் பதிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications