பைடனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் எதிர்க்கட்சி எம்பிகள்... பைடன் அதிபர் ஆவதில் சிக்கல்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் பெற்றுள்ள வெற்றியை எதிர்த்து சுமார் 140 எதிர்க்கட்சி எம்பிகள் வாக்களிக்கவுள்ளனர்.
அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் 6ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் டிரம்பிற்கு எதிராக ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிட்டார்.
இதில் அமெரிக்க தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிக அதிகமான வாக்குகளைப் பெற்றார் பைடன். வரும் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் 46ஆவது அதிபராக அவர் பதவியேற்றுக் கொள்ளவுள்ளார்.
டிரம்ப் குற்றச்சாட்டு
இருப்பினும், ஜோ பைடனின் வெற்றியைத் தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் தேர்தலில் மிகப் பெரியளவில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் டிரம்ப் தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சாட்டிவருகிறார். மேலும், ஜோ பைடனின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி அவர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், தேர்தல் முடிவுகளை நீதிமன்றம் மாற்றவில்லை.
ஆட்சேபனை தெரிவிக்கும் எம்பிகள்
அமெரிக்க வழக்கத்தின்படி நவம்பர் மாத தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் ஜனவரி 6ஆம் தேதி ஒன்றுகூடி புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், அப்போது அமெரிக்காவின் மேல் சபை மற்றும் கீழ் சபையில் இருந்து தலா ஒரு எம்பிகள், இது குறித்து ஆட்சேபனை தெரிவிக்கும்பட்சத்தில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து வாக்கெடுப்பு நடைபெறும்.
எதிர்த்து வாக்கு
இந்நிலையில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எம்பி ஹவ்லி, ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்துத் தான் ஆட்சேபனை தெரிவிக்கபோவதாகக் கூறியுள்ளார். தேர்தலில் மாபெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்பில் குறைந்தபட்சம் 140 குடியரசுக் கட்சியினர் ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முடிவை மாற்ற முடியுமா
இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையானோரின் வாக்குகள் கிடைத்தால் மட்டுமே ஜோ பைடனின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க முடியும். ஆனால், தற்போது அமெரிக்கக் கீழ் சபை ஜனநாயகக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதேபோல மேல் சபையிலும் பல குடியரசுக் கட்சி எம்பிகள், இதில் வாக்களிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
நெருப்புடன் விளையாடாதீர்கள்
டிரம்பின் இத்திட்டத்திற்குக் குடியரசு கட்சியினர் ஆதரவு அளிக்கக் கூடாது என்று நெப்ராஸ்கா குடியரசு கட்சி எம்பி பென் சாஸ் கூறியுள்ளார். மேலும், "டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் நெருப்புடன் விளையாடுகிறார்கள். தேர்தல் முடிவுகளை மாற்ற அவர்கள் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறார்கள். கோடிக்கணக்கான அமெரிக்கர்களின் வாக்குகளைச் செல்லாது என்று அறிவித்து ஜனநாயகத்தின் மாண்பை கேலிக்குள்ளாக அவர்கள் முயல்கின்றனர். நீங்கள் பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தால் உங்களிடம் சிறந்த ஆதாரங்கள் இருக்க வேண்டும். ஆதாரம் எதுவுமின்றி இவ்வாறு செய்வது சரியில்லை" என்றார்.
பைடன் தரப்பு கூறுவது என்ன
குடியரசு கட்சியினரின் இத்திட்டம் குறித்து பைடனின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, "நாடாளுமன்ற உறுப்பினர் ஹவ்லியின் முடிவு விநோதமாக உள்ளது. அமெரிக்கர்கள் இத்தேர்தலில் தங்கள் முடிவுகளை மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளனர். சுமார் 8.1 கோடி மக்கள் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாக்களித்துள்ளனர். ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவதைப் போல இந்த முறையும் பைடனின் வெற்றியை அங்கீகரித்து நாடாளுமன்றம் வாக்களிக்கும்" என்றார்.