பூமி உருவானது எப்படி? அண்டார்டிக்காவில் விஞ்ஞானிகளுக்கு கிடைத்த முக்கிய "க்ளூ"
வாஷிங்டன்: பனிப்பிரதேசமான அண்டார்ட்டிகா கண்டத்தில் மிகவும் அபூர்வமான விண்கற்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியின் தோற்றம் குறித்த ஆய்வுக்கு இந்த விண்கற்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பனிப்பிரதேசங்களை உள்ளடக்கிய அண்டார்டிகா கண்டம் தான் நாம் வாழும் இந்த பூமியில் மிகவும் குளிர்ச்சியான பிரதேசம் ஆகும்.
பூமியின் தென்முனையில் அமைந்து இருப்பதால் அண்டார்டிக்கா கண்டத்தில் சூரிய வெப்பத்தின் குறைவாகவே உள்ளது. இதனால், அண்டார்டிக்கா முழுவதும் பனிகளால் நிறைந்து காணப்படுகிறது.
மாண்டஸ் புயலால் கடலில் பெரிய அளவில் மாற்றங்கள்.. தீவிர ஆய்வில் இறங்கியுள்ள ஆராய்ச்சியாளர்கள்.. ஷாக்
7.6 கிலோ எடை
அண்டார்டிக்கா கண்டத்தில் ஆய்வுக்காக சில நாடுகள் ஆய்வுக்கூடங்களை மட்டுமே வைத்துள்ளன. பனிப்பிரதேசங்களில் வாழக்கூடிய ஏராளமான உயிரினங்கள் இந்த கண்டத்தில் நிறைந்து காணப்படுகின்றன. அண்டார்டிக்காவில் தொடர்ந்து ஆய்வுப்பணிகள் ஒருபக்கம் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அண்டார்டிக்காவில் விண்கற்கள் கண்டறியப்பட்டுள்ளன. கண்டறியப்பட்டுள்ள விண்கற்களின் ஒன்றின் எடை 7.6 கிலோவாக உள்ளது.
பூமி எப்படி உருவானது?
அண்டார்டிகாவில் உள்ள பெல்ஜியம் இளவரசி எலிசபெத் (PEA) என்ற நிலையத்தை சுற்றிலும் இந்த விண்கற்கள் குவிந்து கிடப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த டிசம்பர் 11 ஆம் தேதியில் இருந்து கடந்த 11 ஆம் தேதி வரை ஒரு மாதம் காலம் நடைபெற்ற ஆய்வில் இந்த விண்கற்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதன் மூலம் பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக இந்த பூமி எப்படி உருவானது என்பதை கண்டுபிடிக்கும் ஆய்வில் முக்கிய விடையை கொடுக்கக் கூடியதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
நான்சென் ப்ளூ ஐஸ் பீல்டு
இதுபற்றி சுவிட்சர்லாந்து நாட்டில் ஜூரிச் நகரில் உள்ள இ.டி.எச். ஜூரிச் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல்கள் துறை பேராசிரியர் மரியா ஸ்கொன்பேக்லர் கூறுகையில், "விண்கற்கள் என்பது விண்வெளியில் இருந்து விழுந்த சிறிய பாறைகள் ஆகும். இதற்கு முன்பு. அண்டார்டிகாவில் உள்ள பெல்ஜியம் நிலையத்துக்கு அருகிலுள்ள 'நான்சென் ப்ளூ ஐஸ் பீல்டு'க்கு 3 வெற்றிகரமான பெல்ஜிய-ஜப்பானிய பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மாறுபாடு அடையாத விண்கல்
அவற்றில் 600-க்கும் மேற்பட்ட விண்கற்கள் சேகரிக்கப்பட்டன. செயற்கை கோள்களின் படங்கள் மற்றும் ஜிபிஎஸ் உதவியுடன் விண்கற்கள் கிடைக்கக் கூடிய இடங்களை கண்டறிய குழுக்கள் அமைக்கப்பட்டது. தற்போது இந்தக் குழு 7.6 கிலோ எடை கொண்ட விண்கற்களுடன் திரும்பியுள்ளது. அண்டார்டிக்காவில் இதுபோன்ற பெரிய விண்கற்கள் கிடைப்பது மிகவும் அரிதானது. தற்போது இது மாறுபாடு அடையாத விண்கல் வகையான காண்ட்ரைட் போன்றுதான் தெரிகிறது.
மிகப்பழமையான விண்கற்கள்
இந்த வகையான விண்கற்கள் சிறுகோள்களின் பெல்ட் பகுதியில் இருந்து வந்து அண்டார்டிக்காவின் புளூ ஐஸ் பகுதியில் தனது பயணத்தை நிறைவு செய்து இருக்கும். பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பனிப்பறைகளில் இது இருந்து இருக்கலாம். பூமியில் காணப்படும் மிகப்பழமையான விண்கற்கள் ஆகும். அதாவது பூமி தோன்றும் கால கட்டத்தை சேர்ந்தவையாக இருக்கும்'' என்று தெரிவித்தார். பூமியின் தோற்றம் பற்றிய ஆய்வில் இந்த விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது முக்கிய பங்கு வகிப்பதாக அமையும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.