ஜோ பிடன் அதிரடி.. தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க போர்க் கப்பல்கள்.. அலறும் சீனா!
வாஷிங்டன்: தென் சீன கடல் பகுதி எப்போதும் பதற்றத்திற்குரிய பகுதியாகவே விளங்கி வருகிறது. அவ்வப்போது இப்பகுதியில் அமெரிக்க கப்பல்படை தென் கொரியாவுடன் இணைந்து செல்லும்போது சீனாவுடன் மோதல் ஏற்படுவது அடிக்கடி நிகழும் சம்பவம் ஆகிவிட்டது.
டிரம்ப் ஆட்சி காலத்தில், இந்த கடல் பகுதி இன்னும் அதிக கவனம் ஈர்த்தது. தைவான் உடன் நட்பு பாராட்டியது அமெரிக்கா. இது சீனாவை கோபப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது சீனாவுக்கு சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட தீவுகளின் அருகே அமெரிக்க கப்பல் படை அடிக்கடி கப்பலில் கடந்து செல்வதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது.
சீனா கோபம்
எனவேதான், சீன வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், அமைதிக்கு ஏற்ற வழி அல்ல என்று அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க போர் விமானங்களை சுமந்து செல்லும் கப்பல்கள் சமீபத்தில் தென் சீனக் கடல் பகுதியில் சென்றுள்ளது. யூஎஸ்எஸ் தியோடோர் ரூஸ்வெல்ட் என்ற போர்க் கப்பல் கடந்த வாரம் இறுதியில், தென் சீனக் கடல் பகுதியில் கடந்து சென்றது.
ஜோ பிடன் அதிரடி
அமெரிக்க அதிபராக ஆட்சிப்பொறுப்பேற்ற சில நாட்களில் ஜோ பிடன், அமெரிக்காவின் பலத்தை சீனாவுக்கு காண்பிக்க இவ்வாறு திட்டமிட்டு தங்கள் போர்க்கப்பலை தென் சீன கடலுக்கு அனுப்பியதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்கா மூவ்
தென் சீனக் கடலில் சீனா தனது ஆதிக்கத்தை காட்ட தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு அமெரிக்கா உதவினால் சீனாவுக்கு சிக்கல் எழும். அமெரிக்கா அதற்கான நடவடிக்கையை டிரம்ப் காலத்தில் துவங்கியது. ஆனால் பிடன் அதை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
சீன ஆக்கிரமிப்பு தீவுகள்
வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சொந்தமான தீவை சீனா ஆக்கிரமித்துள்ளது. எனவே இந்த நாடுகள், சீனாவுடன் மோதல் போக்கை கையில் எடுத்துள்ளன. சீனா வல்லரசு நாடு என்பதால் நேரடியாக இந்த நாடுகளால் மோத முடியாவிட்டாலும், பனிப்போரில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தீவின் கரை அருகேதான் அமெரிக்க கப்பல்கள் கடந்து சென்றுள்ளன. எனவேதான் சீனாவுக்கு வயிற்றை கலக்க ஆரம்பித்துள்ளது.