துருக்கியில் 'டைட்டானிக் பட பாணியில்'.. ''கடலில் மூழ்கிய பிரமாண்ட கப்பல்''.. தீயாக பரவும் வீடியோ!
வாஷிங்டன்: துருக்கியில் கடலில் நின்றுகொண்டிருந்த பிரமாண்ட சரக்கு கப்பலில் இருந்து சரக்குகள் இறக்கி கொண்டிருக்கும்போது திடீரென அந்த கப்பல் 'டைட்டானிக் பட பாணியில்' கடலில் மூழ்கும் பரபரப்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
அளவுக்கதிகமான லோடு ஏற்றிச்செல்லும் லாரிகள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாவதை நாம் அடிக்கடி கேள்வி பட்டு இருக்கிறோம்.
சில சமயம், சரக்குகளை இறக்கும் போது தலை குப்புற லாரிகளும்.. டிராக்டர்களும் கவிழ்ந்து விழுவதை அவ்வப்போது நாம் சமூக வலைத்தளங்களில் பார்த்திருப்போம்.

கடலில் மூழ்கிய கப்பல்
ஆனால், ஒரு கப்பலே இப்படி சரிந்து கடலில் மூழ்கி இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா... இப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் துருக்கியில் நடந்துள்ளது. துருக்கியின் துறைமுக நகரம் என்றும் சொல்லப்படும் மெர்சின் நகரில் இருந்து இஸ்கெண்ட்ரம் துறைமுகத்திற்கு 3120 DWT என்ற எகிப்து நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் கடந்த 17 ஆம் தேதி வந்தது. கப்பல் முழுக்க கண்டெய்னர்கள் இருந்தது. துறைமுகத்தில் நங்கூரம் இட்டு நின்ற கப்பலில் இருந்து கண்டெய்னர்களை இறக்கும் பணி நடந்துகொண்டிருந்தது.

சமநிலை தவறியதால்
ஊழியர்கள் கிரேன் கொண்டு கண்டெய்னர்களை கப்பலில் இருந்து இறக்கிக்கொண்டிருந்தனர். அப்போது கப்பலிலும் அதிக ஊழியர்கள் இருந்தனர். இந்த நிலையில், கப்பலின் ஒருபுறத்தில் இருந்து முழுவதுமாக கண்டெய்னர்கள் இறக்கப்பட்டதால் கப்பலில் சமநிலை தவறியது. இதனால் கப்பல் வலதுபக்கமாக அப்படியே சரிந்து கடலில் மூழ்கத்தொடங்கிவிட்டது. இந்தக் காட்சிகளை அங்கிருந்த துறைமுக ஊழியர்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர்.

டைட்டானிக் பட பாணியில்
கப்பல் தண்ணீரில் மூழ்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகின்றன. ஒரு நிமிடத்திற்கும் மேலாக ஓடும் அந்த வீடியோவில், கப்பலில் உள்ள பெரிய கண்டெய்னர்களை கிரேன்கள் ஒவ்வொன்றாக இறக்கி வருகின்றன. இப்படி இறக்கி கொண்டு இருக்கும் போது திடீரென கப்பல் வலதுபக்கமாக சாயத்தொடங்குகிறது. சில வினாடிகளில் அந்த பிரமாண்ட சரக்கு கப்பல் டைட்டானிக் பட பாணியில் அப்படியே வலதுபக்கமாக சரிந்து படிப்படியாக கப்பல் கடலில் மூழ்க தொடங்கியது.

24 கண்டெய்னர்கள் கடலில் மூழ்கியது
கப்பல் சரியத்தொடங்கியதும் சுதாரித்துக்கொண்ட அங்கிருந்த துறைமுக ஊழியர்கள் நகர்ந்து ஓடுகின்றனர். கப்பலில் இருந்து சரக்குகளை இறக்கும் போது கடலில் சரிந்து விபத்துக்குள்ளானது பற்றி துறைமுக அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ''இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 1984 ஆம் ஆண்டு இந்த கப்பல் கட்டப்பட்டது. கப்பல் கடலில் மூழ்கியதில் 24 கண்டெய்னர்களும் வீணாகிவிட்டன. சிறிய அளவில் எண்ணெய் கசிவு கண்டறியப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக கப்பலில் இருந்த சிப்பந்திகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

விசாரணைக்கு உத்தரவு
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக துருக்கி அரசும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கப்பல் பேலன்ஸ் இழந்து விட்டது. அதை சரி செய்யும் முயற்சியும் பலனளிக்கவில்லை. இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மூழ்கிய கப்பலில் உள்ள சரக்குகளை எடுக்கும் பணியும் எரிபொருளை எடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications