அமெரிக்காவில் ஷாக்! எல்லையில் ஆற்றில் சடலமாக மிதந்த இந்தியர்கள் & கைக்குழந்தைகள்! என்ன நடந்தது
வாஷிங்டன்: வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழையும் முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படி நுழைய முயன்ற போது, இந்தியர்கள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் தொடர்ந்து அமெரிக்காவுக்குக் குடியேறி வருகின்றனர். அதிக சம்பளம், படங்களில் வரும் சொகுசு வாழ்க்கை கிடைக்கும் என்று பலரும் அமெரிக்கா செல்கின்றனர்.
அமெரிக்காவுக்கு விசா வாங்கி சட்டப்பூர்வமாகச் செல்ல பல வழிகள் இருக்கவே செய்கிறது. இருந்தாலும் சிலர் முறைகேடான வழிகளைப் பின்பற்றி அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயல்கின்றனர்.

அமெரிக்கா
இப்படி சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைய முயல்பவர்களால் பல வித பிரச்சினை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. பொதுவாக, மெக்சிகோ நாட்டில் இருந்து தான் அதிகப்படியானோர் இப்படி அமெரிக்காவில் நுழைய முயல்வதாகக் கூறப்படுகிறது. அதேபோல கனடா எல்லையில் இருந்தும் சிலர் அமெரிக்காவில் நுழைய முயல்கின்றனர். அப்படி சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைய முயன்ற ஒரு குழு விபத்தில் சிக்கியுள்ளது. இதில் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

8 சடலங்கள்
அவர்கள் கனடாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைய முயன்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. செயின்ட் லாரன்ஸ் ஆற்றின் குறுக்கே படகு மூலம் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளது நிலையில், இந்தியர்கள் சிலரும் கொல்லப்பட்டுள்ளதாக உடல்களை மீட்ட கனடா நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தியர்கள்
இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், "இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.. ஒரு கை குழந்தை, இந்திய நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை மீட்டுள்ளோம். செயின்ட் லாரன்ஸ் ஆற்றின் சதுப்பு நிலப் பகுதியில் இந்த சடலங்களைக் கண்டெடுத்துள்ளோம். இந்தியா மற்றும் ருமேனியா நாடுகளைச் சேர்ந்த இரு குடும்பங்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைய முயன்ற போது இந்த விபத்து நடந்துள்ளது.

எப்படிக் கண்டறியப்பட்டது
முதலில் 6 சடலங்களைக் கைப்பற்றினோம். மறுநாள் இரு சடலங்களைக் கைப்பற்றினோம். கடந்த புதன்கிழமை இரவு இந்த விபத்து நடந்திருக்கும்" என்றனர். மொத்தம் இரு குழந்தைகளின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இருவரிடமும் கனடா நாட்டின் பாஸ்போர்ட் இருந்ததாக கூறப்படுகிறது. மற்றொரு வழக்கில் காணாமல் போன ஒருவரைத் தேடும் பணிகள் நடந்த போது, இந்த சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்குக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல்
நெஞ்சைப் பதற வைக்கும் இந்தச்சம்பவம் எப்படி நடந்தது என்பதை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் மீண்டும் இதுபோன்ற விபத்துகள் நடப்பதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழையும் போக்கு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளாலும் மோசமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

உறுதி
கடந்த ஆண்டு, கனடாவின் மனிடோபா மாகாணத்தில், நான்கு பேர் கொண்ட இந்தியக் குடும்பம், அமெரிக்காவுக்குச் செல்ல முயன்றபோது குளிரில் உறைந்தே உயிரிழந்தனர். இதுபோல சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது குறித்துக் கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் இடையே நடந்த மீட்டிங்கில் சட்ட விரோதமாகப் புகலிடம் கோரி நுழைவோரை நிறுத்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக் கொண்டார்.












Click it and Unblock the Notifications