நான் கண்ணாடி மாதிரி.. நீங்க போட்ற வரியை நாங்களும் போடுவோம்! அதிரடியாக அறிவித்த டொனால்ட் ட்ரம்ப்!
வாஷிங்டன்: இந்தியா அமெரிக்காவிடம் வாகன கட்டண வரியாக 100% வசூலிக்கும் நிலையில், ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் அதே அளவு வரி வசூலிக்கப்படும் எனவும், நமக்கு என்ன வரி விதிக்கப்படுகிறதோ அந்தந்த நாடுகளுக்கு அதே அளவுக்கான வதி விதிக்கப்படும் என உறுதியாக கூறியிருக்கிறார் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப்.
அதிபர் தேர்தல் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்ற பிறகு, அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு அவர்களை அவரவர் நாடுகளுக்கே அனுப்பும் நடவடிக்கை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி வசித்து வந்ததாக இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பலர் ராணுவ விமானத்தில் அவரவர் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகள் இந்தியர்களுக்கு எதிராக இருப்பதாகவே குற்றம் சாட்டப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி உடன் நட்பு கொண்டிருந்தாலும் இந்தியர்கள் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பறிக்கிறார்கள் எனக் கூட பேசி இருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்ட நிலையில், வெள்ளை மாளிகையில் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேசினார்.
வர்த்தகம், வரி விதிப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி ஆகியவை குறித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் வரிவிதிப்பு குறித்து பேசிய ட்ரம்ப்," இந்தியா எவ்வளவு வரி விதிக்கிறதோ அதே அளவு வரியை நாங்களும் விதிப்போம் என கூறி இருந்தார். இந்த நிலையில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அந்த நாடுகள் அமெரிக்க பொருட்கள் மீது விரிக்கும் அதே அளவு வரி விதிக்கப்படும் என அதிரடியாக அறிவித்திருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," மற்ற நாடுகள் பல ஆண்டுகளாக அமெரிக்காவுக்கு எதிராக அதிகமாக வரி விதித்து வருகின்றன. இப்போது அதே முறையை அவர்களுக்கு எதிராக பயன்படுத்திய வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஐரோப்பிய யூனியன், சீனா, பிரேசில், இந்தியா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் நாம் வசூலிக்கும் வரியை விட அதிக அளவில் வரி வசூல் செய்கின்றன. இது நியாயமற்றது. இந்தியா தனது வாகன கட்டண வரியாக 100 சதவீதம் வசூலிக்கிறது.
இந்த நடவடிக்கை சில பொருளாதார சிறு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அமெரிக்க தொழில்களை பாதுகாக்க இது தேவையான நடவடிக்கை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அதிகமான வரி விதிப்பு முறையால் சில இடையூறுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் நாம் அதனை பற்றி கவலைப்படவில்லை. அது ஒரு பெரிய விஷயமாக இருக்காது. அதிகப்படியான வரி ட்ரில்லியன் டாலர்களை உருவாக்கும். மற்ற நாடுகள் பல தசாப்தங்களாக நமக்கு எதிராக அதிக வரி விதிப்பு முறையை பயன்படுத்தி வருகிறது.
இப்போது அந்த நாடுகளுக்கு எதிராக நாம் வரி விதிப்பதற்கான நேரம். ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் பரஸ்பர வரி வசூலிப்பு தொடங்குகிறது. நமக்கு எந்த அளவு வரி விதிக்கப்படுகிறதோ அந்த நாடுகளுக்கு நாமம் அதே அளவு வரிகளை விதிப்போம்" என கூறி இருக்கிறார்.
ட்ரம்பின் இந்த அறிவிப்பு உலக பொருளாதாரத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கனடா மெக்சிகோ, சீனா போன்ற நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக அதிக வரி விதித்துள்ளது. மேலும் அமெரிக்காவின் வரி கட்டுப்பாடு அதிகரித்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனாவும் எச்சரித்து இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு இந்தியா எதிர்வினை ஆற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications