H-1B விசாவை விடுங்க.. டிரம்ப் வைக்கும் பெரிய ஆப்பு! இனி அமெரிக்க கனவை புதைச்சுட வேண்டியதுதான்
வாஷிங்டன்: H-1B விசா விவகாரத்தில் அமெரிக்காவின் புதிய சட்டங்கள் இந்தியர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், கோல்டு கார்டு திட்டத்தை தீவிரப்படுத்த அமெரிக்கா யோசித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திட்டமிட்டபடி அந்நாட்டு அரசு கோல்டு கார்டு விஷயத்தை தீவிரமாக கையில் எடுத்தால் அமெரிக்க வேலை என்கிற கனவை, இந்தியர்கள் குழி தோண்டி புதைத்து விட வேண்டியதுதான் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்கா திறமையான பணியாளர்களை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது. உள்நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் இந்த யோசனையை அந்நாடு முன்னெடுத்திருக்கிறது. அதன்படி இனி அந்நாட்டுக்குள் நுழைபவர்கள் ஒன்று திறமையானவர்களாக இருக்க வேண்டும், அல்லது மிகப்பெரிய முதலீட்டாளர்களாக இருக்க வேண்டும்.

இதற்காகத்தான் சமீபத்தில் H-1B விசா நடைமுறையை அந்நாட்டு அரசு கடுமையாக்கி இருக்கிறது. இந்த விசாவை பயன்படுத்தி அதிக அளவில் வெளிநாட்டினர் அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள் என்றும், இதை தடுக்கவே, விசா நடைமுறையை கடினமாக்கி இருப்பதாகவும் அந்நாட்டு அரசு விளக்கமளித்திருக்கிறது. H-1B விசா மூலம் அமெரிக்காவில் மூன்று ஆண்டுகளுக்கு வசிக்க முடியும். விசாவை நீட்டித்தால் அதிகபட்சமாக 6 ஆண்டுகள் வரை தங்கலாம். ஆனால் புதிதாக விசாவை விண்ணப்பிப்பவர்கள் ரூ.88 லட்சம் ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கு முன்பு கட்டணம் மிக குறைவாக இருந்தது.
தற்போது இந்த கட்டணத்தை அதிகரித்திருப்பதன் மூலம், அதிக அளவில் வெளிநாட்டு பணியாளர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதை கட்டுப்படுத்த முடியும் என்று அமெரிக்க அரசு நம்புகிறது. இதனால் இந்தியர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில் அமெரிக்காவில் ஏறத்தாழ 5 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் H-1B விசாவை கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 71% அதாவது 3.5 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் இந்தியர்கள் ஆவார்கள். அந்த வகையில் இந்த விசா கட்டண உயர்வு, இந்தியர்களுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இனிவரும் காலங்களில் இந்தியர்கள் அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்வது ஏறத்தாழ சாத்தியமற்றதாக மாற்றியிருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் கோல்டு கார்டு திட்டத்தை தீவிரமாக அமல்படுத்த அமெரிக்க அரசு யோசித்து வருகிறது. அதாவது சுமார் ரூ.8.8 கோடி முதலீட்டை அமெரிக்காவில் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த கோல்ட் கார்டு வழங்கப்படும்.
பொதுவாக அமெரிக்காவுக்கு போக வேண்டும் எனில் விசாவுக்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் உடனே கோல்டு கார்டு விசா கிடைக்கும். அதே போல அமெரிக்காவில் ஏற்கனவே H-1B விசாவில் தங்கி இருப்பவர்கள், கிரீன் கார்டு எனப்படும் நிரந்தர குடியுரிமையை பெற நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். ஆனால் கோல்டு கார்டு விசா வைத்திருப்பவர்களுக்கு எளிதில் குடியுரிமை கிடைக்கும்.
எதிர்காலத்தில் இந்த திட்டம் தீவிரமாக அமல்படுத்த இருப்பதால், H-1B விசா நடைமுறைகள் விரைவில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதேபோல இந்தியர்கள் எதிர்காலத்தில் அமெரிக்காவில் சென்று வேலை செய்வதும் வெறும் கனவாக மட்டுமே மாறிவிடும் சூழலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications