பிடிவாதம் காட்டும் டிரம்ப்! இனி உலக பொருளாதாரம்.. இன்னும் மோசமாகும்! வல்லுநர்கள் வார்னிங்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் 'பரஸ்பர வரி' விதிப்பை கைவிடுவதாக தெரியவில்லை. தனது பக்கத்து நாடான கனடா மீது, தற்போது 35% கூடுதல் வரியை அறிவித்திருக்கிறார். இப்படி பக்கத்து நாடுகளுக்கும், நட்பு நாடுகளுக்கும் வரியை விதிப்பதன் மூலம், டிரம்ப் உலக பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மையை உருவாக்குகிறார் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
டிரம்ப் விதிக்கும் வரி, பதிலுக்கு அண்டை நாடுகள் விதிக்கும் வரி, இதன் மூலம் உயரும் மூலப்பொருட்களின் விலை ஆகியவை இந்தியா போன்ற நாடுகளையும் பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்திருக்கின்றனர்.

டிரம்ப் சொன்னது என்ன?
இன்று டிரம்ப் கனடா நாட்டுக்கு 35% கூடுதல் வரியை அறிவித்திருக்கிறார். அதாவது கனடா நாட்டிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்கள் 35% கூடுதல் விலையில் விற்கப்படும். கனடாவுக்கு மட்டுமா? என்று கேட்டால் இல்லை. ஜப்பான் தென்கொரியா என தனது நட்பு நாடுகளுக்கும் வரியை விதித்திருக்கிறார். கனடாவுக்கு விதிக்கப்பட்ட வரி ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும், இதற்கு பதிலாக கனடா எதிர் வரியை போட்டால், நாங்கள் எங்கள் வரியை கடுமையாக்குவோம் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
கனடாவுக்கு ஏன் வரி?
எங்கள் நாட்டு பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு வரியை விதிப்போம் என்பதுதான் டிரம்பின் தாரக மந்திரம். எனவேதான் கனடா தொடங்கி ஜப்பான் வரை தனது நட்பு நாடுகள், பக்கத்து நாடுகள் என அனைத்துக்கும் வரியை விதித்திருக்கிறார். கனடாவும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த பாதிப்பு வெறும் கனடாவுடன் மட்டும் நின்றுவிடப்போவதில்லை என்பதுதான் தற்போது எழுந்திருக்கும் அச்சம்.
ஐநாவின் பொருளாதார நிபுணர் பமேலா கோக்-ஹாமில்டன் இதுபற்றி ஏற்கெனவே எச்சரித்திருந்தார். அதாவது, அமெரிக்காவின் 'பரஸ்பர வரி விதிப்பு' நடவடிக்கை காரணமாக, உலகளாவிய வர்த்தகம் 3 சதவீதம் அளவுக்கு சுருங்க வாய்ப்புள்ளது. மேலும், இந்த நடவடிக்கையால், உலக நாடுகளின் ஏற்றுமதியானது அமெரிக்க மற்றும் சீனச் சந்தைகளிலிருந்து இந்தியா, கனடா, பிரேசில் போன்ற பிற சந்தைகளுக்கு மாறக்கூடும் என எச்சரித்துள்ளார்.
பொருளாதார பாதிப்பு ஏன்?
கனடாவின் பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதிக்கறது எனில்.. கனடா சும்மா இருக்குமா? அது மட்டும் என்ன தக்காளி தொக்கா? எனவே கனடாவும் பதிலுக்கு வரியை போடும். எனவே இயல்பாகவே கனடாவின் பொருட்களின் விலை உயரும். ஆட்டோமொபைல் உதிரி பாகங்களுக்கு கனடா பேமஸான நாடு. எனவே ஆட்டோமொபைல் உதிரி பாகங்களின் விலை அதிகரித்தால், அது கார் உற்பத்தியில் எதிரொலிக்கும். எனவே கார் விலை உயரும்.
இப்படி ஒருவ்வொரு நாடுகளும் தங்கள் பொருட்களின் விலையை உயர்த்தினால், அது சங்கிலி தொடர் போல மொத்தமாக உலக பொருளாதாரத்தை பாதிக்கும்.
சிக்கலில் இந்தியா
இந்தியாவும் தற்போது இப்படியான பாதிப்பில்தான் சிக்கியிருக்கிறது. அதாவது, சீனா மீது அமெரிக்கா வரியை போட.. பதிலுக்கு சீனாவும் வரியை போட.. இரு நாடுகளுக்கு இடையில் ஒரே பஞ்சாயத்தாக போய்க்கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில், அமெரிக்காவை அடிக்க வரியெல்லாம் வேலைக்கு ஆகாது என்று டென்ஷன் ஆன சீனா, அரிய காந்தங்களை ஏற்றுமதி செய்வதை தடை விதித்தது.
இதனால் இந்திய ஆட்டோமொபைல் துறை தனது உற்பத்தியை குறைக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளது. எனவே இதனையெல்லாம் கணக்கில் கொண்டு, டிரம்ப் வரி விஷயத்தை கைவிட வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications