ஆபிரகாம் லிங்கன் மாதிரி.. என்னை குறி வைக்கிறார்கள்! புலம்பி தள்ளிய டிரம்ப்!
வாஷிங்டன்: வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடந்த தாக்குதல் முயற்சிக்குப் பிறகு, வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய டிரம்ப் ஆபிரகாம் லிங்கனுடன் தன்னை ஒப்பிட்டு பேசியிருக்கிறார்.
"எதுவுமே செய்யாதவர்களை யாரும் குறிவைக்க மாட்டார்கள். லிங்கனைப் போல நாட்டை மாற்றியமைப்பவர்களுக்கே இந்த ஆபத்து அதிகம்" என லிங்கனுடன் தன்னை ஒப்பிட்டு டிரம்ப் பேசியிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

நேற்று இரவு வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில், 'வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்க' விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் டிரம்ப், மெலனியா மற்றும் துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். அப்போது திடீரென துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் நல்வாய்ப்பாக டிரம்ப் உயிர் தப்பினார்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் நபர், கோல் டோமஸ் ஆலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உணவருந்தும் அறையின் மேல் தளத்தில் இருந்த சோதனைச் சாவடி வழியாகப் பாய்ந்து வந்த அவர், பாதுகாப்பு அதிகாரி ஒருவரைச் சுட்டுள்ளார். அந்த அதிகாரி புல்லட் ப்ரூப் உடை அணிந்திருந்ததால் உயிர் தப்பினார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், "பெரிய தாக்கம் ஏற்படுத்தும் தலைவர்களைத்தான் உலகம் குறிவைக்கும்" என்று கூறினார். 1865-ல் சுட்டுக்கொல்லப்பட்ட லிங்கனைப் போலவே, தாமும் ஒரு வலிமையான தலைவர் என்பதால் இத்தகைய தாக்குதல்கள் நடப்பதாக அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தார்.
டிரம்ப் இதற்கு முன்பும் பலமுறை லிங்கனுடன் தன்னை ஒப்பிட்டு பேசியிருக்கிறார். தொப்பி அணிந்திருக்கும் லிங்கனைத் தவிர, வரலாற்றில் மற்றெந்த அதிபரையும் விட நான் அதிகத் தகுதியுள்ளவன் என்று 2019-ல் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
அரசியலை கார் பந்தயம் மற்றும் காளை மாடு சவாரி போன்ற சாகசத் தொழில்களுடன் டிரம்ப் ஒப்பிட்டுள்ளார். இது இவ்வளவு ஆபத்தான தொழில் என்று எனக்கு யாரும் சொல்லவில்லை என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருக்கின்றன. என்னதான் இருந்தாலும் லிங்கனுடன் ஒப்பிடுவதெல்லாம் ரொம்ப ஓவர் என்று டிரம்புக்கு கண்டனம் தெரிவத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications