டிரம்ப் அடங்கவே மாட்டார் போல.. "இதுவரை கண்டிராத தாக்குதல் இருக்கு!" ஈரானுக்கு புதிய எச்சரிக்கை
வாஷிங்டன்: வளைகுடாவில் இப்போது தான் அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா இறுதி செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் மிக மோசமான ஒரு தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் மிரட்டியிருக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதலை ஆரம்பித்தது. இந்த போர் ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்த நிலையில், மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளைகுடா மட்டுமின்றி உலகெங்கும் இந்த பாதிப்புகள் எதிரொலித்தது. இந்தச் சூழலில் தான் நேற்று காலை திடீரென போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால் மெல்ல அமைதி திரும்பும் சூழல் ஏற்பட்டது.

டிரம்ப் எச்சரிக்கை
போர் நிறுத்தம் அமலில் இருக்கும் சூழலில் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு திடீரென புதிய எச்சரிக்கைகளை விடுத்தார். இறுதி ஒப்பந்தம் எட்டும் வரை அமெரிக்கப் படைகள் ஈரானிலும் அதைச் சுற்றியும் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்றும் டீலை இறுதி செய்யவில்லை என்றால் மோசமான தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும், "ஏற்கனவே பலவீனப்படுத்தப்பட்ட எதிரியைத் துல்லியமாக அழிப்பதற்குத் தேவையான அனைத்து அமெரிக்கக் கப்பல்கள், விமானங்கள், ராணுவப் பணியாளர்கள், கூடுதல் வெடிமருந்துகள், ஆயுதங்கள் என அனைத்தும் உண்மையான ஒப்பந்தம் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும் வரை ஈரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டிருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
மிரட்டல்
ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கக் கூடாது என்பதை அமைதி ஒப்பந்தம் வலியுறுத்துவதை டிரம்ப் சுட்டிக்காட்டினார். நிபந்தனைகள் மீறப்பட்டால், முன்பு கண்டிராத மிகப் பெரியளவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் எனவும் அவர் எச்சரித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும், "எதாவது ஒரு காரணத்தால், இறுதி ஒப்பந்தம் நிறைவேறாமல் போனால் மீண்டும் தாக்குதல் தொடங்கும்.. யாரும் இதுவரை கண்டிராத அளவுக்கு மிகப் பெரிய மற்றும் மிக மோசமான தாக்குதல் நடத்தப்படும்" என்று அவர் எச்சரித்தார்.
நீடிக்கும் பதற்றம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தம் இருந்த போதிலும், மத்திய கிழக்கில் பதற்றம் நீடிக்கிறது. ஒப்பந்தம் எட்டப்பட்ட சில நிமிடங்களிலேயே, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினரைக் குறிவைத்து இஸ்ரேல் மிகப் பெரிய வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. இந்த தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஹிஸ்புல்லா இல்லை என்பதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு என வெளிப்படையாக அறிவித்தார். அதாவது லெபனான் மீதான தாக்குதல்கள் தொடரும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
லெபனான் தாக்குதல்
லெபனானில் தாக்குதல்கள் தொடர்வதால், உலகின் பரபரப்பான எரிசக்தி வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி குறித்து மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்தால் அது அமெரிக்காவுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கருதுவோம் என ஈரான் கூறியுள்ளது. இதனால் ஹார்முஸை மீண்டும் மூடுவோம் என ஈரான் மிரட்டியுள்ளது. இருப்பினும், இதில் இதுவரை தெளிவான முடிவுகள் எதுவுமில்லை












Click it and Unblock the Notifications