டிரம்ப் உத்தரவால் அம்பலமாகும் உண்மைகள்.. கென்னடி, மார்டின் லூதர் கிங் காலம் தூசு தட்டப்படுகிறது
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த காலங்களில் சுட்டுக் கொல்லப்பட்ட அதிபர் ஜான் எஃப். கென்னடி, அவரது சகோதரர் ராபர்ட் கென்னடி, கறுப்பின மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோர் மரணம் தொடர்பான அனைத்து ரகசிய கோப்புகளையும் வெளியிட டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
நாம் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோம் என்றால் அதில் பல மர்மமான மரணங்கள் இருக்கும். அதில் அமெரிக்க வரலாற்றில் மர்மமான சர்ச்சைக்குரிய மரணங்களில் ஒன்று அதிபர் ஜான் எஃப். கென்னடியின் கொலை.

மரணங்கள்:
அமெரிக்க வரலாற்றில் ஆபிரகாம் லிங்கன், ஜேம்ஸ் ஏ. கார்பீல்ட், வில்லியம் மெக்கின்லி, ஜான் எஃப். கென்னடி ஆகிய நான்கு அதிபர்கள் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் மிகவும் சர்ச்சைக்குரியது ஜான் எஃப். கென்னடியின் மரணம் தான். கடந்த 1963ம் ஆண்டு அதிபர் ஜான் எஃப். கென்னடி காரில் பேரணி சென்று கொண்டு இருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதிபர் கென்னடி 1963ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி டல்லாஸ் நகரில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். விசாரணையில் லீ ஹார்வி ஓஸ்வால் என்பவர் கென்னடியை சுட்டுக் கொன்று தெரிய வந்தது. கென்னடி செல்லும் பாதையில் இருந்த டெக்சாஸ் பள்ளியின் ஆறாவது மாடி ஜன்னலில் இருந்து லீ ஹார்வி துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் நடந்து இரு நாட்களில் ஓஸ்வால்ட்டும் கொல்லப்பட்டார்.
டிரம்ப் உத்தரவு:
இது நடந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் கூட இன்னுமே இவரது மரணத்தில் பல மர்மங்கள் நிலவி வருகிறது. இது தொடர்பான அனைத்து விரிவான டாக்குமெண்டுகளையும் வெளியிட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே புதிதாக அதிபராகப் பதவியேற்றுள்ள டிரம்ப், கென்னடி படுகொலை தொடர்பான அனைத்து ரகசிய டாக்குமெண்டுகளையும் வெளியிட டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ஜான் எஃப். கென்னடி படுகொலை மட்டுமின்றி, அவரது சகோதரர் ராபர்ட் எஃப்.கென்னடியும் கூட இதுபோல மர்மமான முறையில் கொல்லப்பட்டார். டிரம்ப் உத்தரவில் ராபர்ட் எஃப்.கென்னடி படுகொலை, சமூக செயற்பாட்டாளர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கொலை ஆகியவை குறித்த டாக்குமெண்டுகளை வெளியிட டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
டிரம்ப்:
தேர்தல் பிரச்சாரத்தின் போதே அதிபர் கென்னடியின் படுகொலை பற்றிய அனைத்து ஆவணங்களையும் வெளியிட உத்தரவிடப் போகிறேன் என டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அதிபராகப் பதவியேற்ற உடனேயே அது தொடர்பான கோப்புகளிலும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். டிரம்ப் இதற்கு முன்பு 2017- 2021 காலகட்டத்தில் அதிபராக இருந்த போதும் இதேபோல அனைத்து டாக்குமெண்டுகளையும் வெளியிட உள்ளதாக வாக்குறுதி அளித்திருந்தார். இருப்பினும், சிஐஏ மற்றும் எஃப்பிஐ அழுத்தம் காரணமாக சில ஆவணங்களை அவரால் வெளியிட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிச்சத்திற்கு வர போகும் உண்மைகள்:
ஏற்கனவே அதிபர் கென்னடியின் படுகொலை குறித்த ஆவணங்களில் சுமார் 50 லட்சம் ஆவணங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும், சுமார் 3,000 டாக்குமெண்டுகள் மட்டும் வெளியிடப்படவில்லை. ஆனால், இதில் முக்கியமான தகவல்கள் இருக்க வாய்ப்பில்லை என்றும் சில நுட்பமான தகவல்கள் மட்டுமே இருக்கலாம் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.. இருப்பினும், இந்த கொலைகளில் சதி இருப்பதாகவும் இதை டிரம்பின் உத்தரவு வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications