அமெரிக்க அதிபர் டிரம்ப் - புதின் சந்திப்பு.. 2.5 மணி நேரம் நடைபெற்ற மீட்டிங்! இரு தலைவர்களும் பேசியது என்ன?
அலஸ்கா: அமெரிக்க அதிபர் டிரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் (Donald Trump Putin meet) அலஸ்கா மாகாணத்தில் சந்தித்து பேசினர். உலகமே உற்று நோக்கிய இந்த சந்திப்பு 2.5 மணி நேரம் நடைபெற்றது. இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமாக நடைபெற்றதாக இரு தலைவர்களும் கூறினர். எனினும் உக்ரைன் - ரஷ்யா போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து இருவருமே எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர், உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பலமுறை பேசினார். உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்த போதிலும்- உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நிறுத்தம் தொடர்பாக எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில்தான், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் எல்மென்டார்ப் - ரிச்சர்ட்சன் கூட்டு ராணுவ படை தளத்தில் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி இந்த சந்திப்பில் பங்கேற்பதற்காக புதின் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் தனி விமானத்தில் அலாஸ்கா சென்றார்.
அலாஸ்கா ராணுவ படை தளத்தில் வந்து இறங்கிய புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை டொனால்டு டிரம்ப் நேரில் சென்று கைகுலுக்கி வரவேற்றார். பின்னர் இருவரும் சந்தித்து பேசினார்கள். அப்போது ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்த சந்திப்பு சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. உலகமே உற்று நோக்கிய இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமாக நடைபெற்றது என்று டிரம்ப் கூறினார். சில விஷயங்கள் தீர்வு எட்டப்படவில்லை. எனினும் ஆக்கப்பூர்வமான சந்திப்பாக அமைந்ததாக குறிப்பிட்டார். புதின் கூறுகையில் பேச்சுவார்த்தை முழுவதுமாக பயனுள்ளதாக அமைந்தது என்றார். இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது இந்த தகவலை தெரிவித்தனர்.
டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், "ஆக்கப்பூர்வமான சந்திப்பு நடைபெற்றது. பல விஷயங்கள் ஒப்புக்கொள்ளபட்டது. சில விஷயங்கள் இன்னும் உள்ளன." என்றார். புதின் கூறுகையில், "பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாகவும் பரஸ்பர மரியாதையுடன் நடைபெற்றது என்றார். இரு தலைவர்களுக்கு இடையேயான அடுத்த சந்திப்பை மாஸ்கோவில் நடத்த புதின் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications