டிரம்ப் நடத்திய 18 தேர்தல் பிரசாரங்களால் 30,000 பேருக்கு கொரோனா- 700 பேர் பலி- பகீர் ரிப்போர்ட்
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அதிபர் டொனால்ட் டிரம்ப் நடத்திய 18 தேர்தல் பிரசார கூட்டங்களால் 30,000 பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கொரோனாவால் 700க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் எனவும் ஆய்வு அறிக்கை ஒன்று பகீர் தகவலை வெளியிட்டிருக்கிறது.
அமெரிக்காவில் கொரோனா பரவல் தொடர்ந்து உச்சமாகவே இருந்து வருகிறது. புதியதாக 80,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா மரணங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில் The Effects of Large Group Meetings on the Spread of COVID-19: The Case of Trump Rallies' என்ற தலைப்பில் Stanford University ஆய்வாளர்கள் ஒரு ஆய்வு நடத்தினர். ஜூன் 20 முதல் செப்டம்பர் 22 வரை டொனால்ட் டிரம்ப் நடத்திய 18 பிரசார கூட்டங்கள் இதில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
இதில்தான் டிரம்ப்பின் கூட்டங்களால் 30,000 பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது; கொரோனாவால் 700க்கும் அதிகமானோர் மரணமடைந்திருக்கலாம் என கணிக்கப்பட்டு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக பெரிய அளவிலான ஒன்று கூடல்களில், முக கவசம், சமூக இடைவெளிகளை பின்பற்றாமல் இருப்பதும் கொரோனா சமூகப் பரவலாக மாறுவதற்கு காரணமாகிவிடுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
அமெரிக்காவில் 2,25,000 பேர் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர்; 87 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது. ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன், கொரோனா தாக்குதல் குறித்து எந்த கவலையுமே படாதவர் டொனால் டிரம்ப்.. மக்களை சாகவிட்டு வேடிக்கை பார்க்கிறார். டிரம்ப் ஆட்சியில் மக்கள் கொரோனாவுடன் சாக பழகிவிட்டனர் என சாடியிருந்தார்.