கண்கள் சிவந்த டிரம்ப்.. ஈரான் அனுப்பிய டாக்குமெண்ட்டை பார்த்து கடும் கோபம்! அடுத்து என்ன நடக்கும்!
தெஹ்ரான்: ஈரான் - அமெரிக்கா போரில் தற்போது தற்காலிகப் போர்நிறுத்தம் நிலவி வந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் இன்னும் முழுமையாக முடியவில்லை. இதற்கிடையே ஈரான் தனது புதிய அமைதித் திட்டத்தைப் பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளது. இருப்பினும், டிரம்ப் இதை ஏற்காமல் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதனால் பதற்றம் தொடர்கிறது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது தொடங்கிய அதிரடித் தாக்குதல்கள், ஏப்ரல் 8ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், இதுவரை இரு தரப்புக்கும் இடையே நடந்த ஒரே ஒரு நேரடிப் பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்தது. இதனால் எப்போது வேண்டும் என்றாலும் மீண்டும் ஒரு மோதல் வெடிக்கும் என்ற ஒரு சூழலே நிலவுகிறது.

ஈரான் அமைதி ஒப்பந்தம்
ஏற்கனவே ஒரு முறை ஈரான் தனது 3 ஸ்டேஜ் அமைதி திட்டத்தை அமெரிக்காவுக்கு அனுப்பியிருந்த நிலையில், அதை டிரம்ப் நிர்வாகம் ஏற்க முடியாது என மறுத்துவிட்டது. இதற்கிடையே ஈரான் தனது புதிய அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முன்மொழிவைப் பாகிஸ்தான் தூதுவர் வழியாக அமெரிக்காவிடம் வியாழக்கிழமை மாலை ஒப்படைத்துள்ளது. ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
அதேநேரம் ஈரானின் இந்த புதிய முன்மொழிவு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பேசிய டிரம்ப, "முட்டாள்கள் கையில் அணு ஆயுதம் இருப்பதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஈரானின் இந்தத் திட்டம் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை.. அவர்கள் கேட்கும் சில சலுகைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஈரானின் தலைமை ஒரு ஒருங்கிணைப்பு இல்லாமல் சிதறிக் கிடக்கிறது" என்றார்.
ஈரான்
மறுபுறம் ஈரானும் பெரிதாக விட்டுக் கொடுக்க ரெடியாக இல்லை.. எது நடந்தாலும் எதிர்கொள்ள ரெடியாக இருப்பதாகவே ஈரானின் மூத்த மதகுருவும் நீதித்துறைத் தலைவருமான கோலாம் ஹொசைன் மொஹ்சேனி எஜே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும், "நாங்கள் போரை விரும்பவில்லை; அதன் தொடர்ச்சியையும் நாங்கள் வரவேற்கவில்லை. ஆனால், எங்கள் மீது எதையும் திணிக்க முயன்றால் அதை ஏற்க மாட்டோம்" என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஏன் பதற்றம்
போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், ஹார்முஸை அமெரிக்கா முடக்கியுள்ளது. அதேபோல ஈரானும் ஹார்முஸ் வழியாக எந்தவொரு கப்பலும் செல்ல அனுமதிக்க மாட்டோம் எனச் சொல்லித் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்படி ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது இறுக்கமான கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்கள் உலகச் சந்தைக்கு வருவது தடைப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை, போர் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட தற்போது 50%க்கு மேல் உயர்ந்துவிட்டது..
அடுத்து என்ன
ஈரான் துறைமுகங்களுக்கு வேறு நாடுகளின் கப்பல்கள் போகாத வகையில் அமெரிக்கா தனது கடற்படை மூலம் கவுண்டர் பிளாக்கேட் செய்துள்ளது. இது பல மாதங்களுக்கு நீடிக்கும் என அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளதால், சந்தையில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஒருவேளை அது பல மாதங்களுக்கு நீடித்தால் கச்சா எண்ணெய் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் தொடும்.
ஒருபுறம் ஐரோப்பிய மத்திய வங்கி பணவீக்கத்தைக் கண்டு அஞ்சுகிறது; மறுபுறம் கச்சா எண்ணெய் விலை உயர்வால் உலக நாடுகளின் பட்ஜெட் எகிறுகிறது. அமெரிக்காவின் பிடிவாதமும், ஈரானின் பொருளாதாரப் பிடியும் எப்போது தளரும் என்பதே இப்போது ஒட்டுமொத்த உலகின் கேள்வியாக உள்ளது.












Click it and Unblock the Notifications