ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திய இந்தியா? ’நல்ல முடிவு’ டிரம்ப் சொன்ன பரபர மேட்டர்
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்திய நிறுவனங்கள் நிறுத்திவிட்டதாக கேள்விப்பட்டதாகவும், இது உண்மையாக இருந்தால் நல்ல முடிவு எனவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்துள்ள சூழலில், இவ்வாறு கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவுக்கு 25% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்றும், ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி மற்றும் ஆயுதங்கள் வாங்கும் இந்தியாவிற்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

மிகப்பெரிய பேராபத்து
அமெரிக்காவின் வரி 25 சதவீதம் இந்தியாவிற்கு ஆபத்து என்றாலும், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்க கூடாது, அமெரிக்காவின் விவசாய பொருட்களை நாம் வாங்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு நாம் ஒப்புக்கொண்டால் அது அதனை விட மிகப்பெரிய பேராபத்து ஆக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
நான் கேள்விப்பட்டது இது தான்
உக்ரைன் போரில் ஈடுபட்டு வரும் ரஷ்யாவின் பொருளாதாரத்தை பலவீனமாக்க திட்டமிட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியா மற்றும், சீனா ஆகிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது உறுத்தலாக இருந்த நிலையில், டிரம்ப் எச்சரிக்கையை விடுத்து இருந்தார். இந்த நிலையில்தான், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியிருப்பதாக கூறியுள்ளார் டிரம்ப்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், இது உறுதிப்படுத்தப்பட்டால் சிறந்த முடிவு என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணய் இனி வாங்கப்போவது இல்லை என நான் புரிந்து கொள்கிறேன். இதைத்தான் நான் கேள்விப்படேன். அது சரியான தகவலா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. எனினும், இது ஒரு நல்ல முடிவு. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்றார்.
மத்திய அரசு விளக்கம்
முன்னதாக, நேற்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், "சந்தை நிலவரம் மற்றும் தேசிய நலனை கருத்தில் கொண்டு இந்தியா தனது எரிசக்தி கொள்முதலை மேற்கொள்கிறது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை இந்திய எண்ணய் நிறுவனங்கள் நிறுத்திவிட்டதாக கூறப்படும் தகவல் பற்றி மத்திய அரசு அறிந்து இருக்கவில்லை" என்று கூறியிருந்தது.
தள்ளுபடி குறைந்து வருவதால், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் கடந்த வாரங்களில் நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், மத்திய அரசு மேற்கண்டவாறு விளக்கம் அளித்து இருந்தது.
ரஷ்யாவுக்கு 100 சதவீத வரி
இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், மங்களூர் ரீஃபைனரி பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் ஆகியவை, ரஷ்யாவிடம் இருந்து கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யவில்லை என்று ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிடுள்ளது.
எனினும், இது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை வெளிப்படையாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. முன்னதாக கடந்த ஜூலை 14 ஆம் தேதி, டிரம்ப் வெளியிட்ட அறிப்பு ஒன்றில் உக்ரைனுடன் அமைதியை ஏற்படுத்தாவிட்டால், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications