மீண்டும் ரெசிப்ரோக்கல் வரி? டைம் வேற முடிய போகுதே.. டிரம்ப்பால் இந்தியாவுக்கு சிக்கல் வருமா?
வாஷிங்டன்: அமெரிக்கா கடந்த ஏப்ரல் மாதம் ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்து, பிறகு அவரே அதை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்போவதாக அறிவித்திருந்தார். அந்த 90 நாட்கள் காலக்கெடு முடிய இன்னும் 12 நாட்களே இருக்கும் சூழலில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளன. தற்போது வரை பிரிட்டன் மட்டுமே வர்த்தக ஒப்பந்தம் போட்டுள்ள நிலையில், மற்ற நாடுகள் மீது டிரம்ப் வரி விதிப்பாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டிரம்ப் அப்போது ஏகப்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். பல கட்டுப்பாடுகளை விதித்தார். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் அவர் உலகின் பல்வேறு நாடுகள் மீதும் ரெசிப்ரோக்கல் வரிகளை விதித்தார். அதாவது உலக நாடுகள் அமெரிக்கா மீது அதிக வரி விதிப்பதாகவும் இதனால் தானும் பதிலடி வரிகளை விதிப்பேன் என சொல்லி இந்த வரிகளை அறிவித்தார்.

டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரி
இது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பொருளாதார ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. உலகமே டிரம்பின் இந்த அறிவிப்பால் பரபரத்து போய் இருந்தது. அந்த நேரத்தில் மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், திடீரென ரெசிப்ரோக்கல் வரியை 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இந்தக் காலகட்டத்திற்குள் உலக நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த 90 நாட்கள் வரும் ஜூலை 9ம் தேதியுடன் நிறைவடைகிறது. அடுத்து என்ன நடக்கும் என்பது தெளிவில்லாத சூழலே நிலவி வந்தது. ஏனென்றால் இப்போது வரை பிரிட்டனுடன் மட்டுமே அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது. மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும் கூட இன்னும் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.
அடுத்து என்ன?
இதற்கிடையே ஜூலை 9ஆம் தேதி நெருங்கி வருவதால், வெள்ளை மாளிகை அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாகப் பரிசீலனை செய்து வருகிறது. டிரம்ப் மீண்டும் வரிகளை விதிப்பாரா.. வரி நிறுத்தம் மேலும் நீடிக்கப்படுமா என்பதில் தெளிவில்லாத சூழல் இருக்கிறது. இதற்கிடையே வெள்ளை மாளிகையின் தலைமை பொருளாதார நிபுணர் ஸ்டீபன் மிரான் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
மீண்டும் வரிகள்?
அதாவது எந்த நாடுகள் எல்லாம் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதோ.. அவர்களுக்கு எல்லாம் காலவகாசம் கூடுதலாக வழங்கப்படும் என ஸ்டீபன் கூறியிருக்கிறார். அதாவது வர்த்தக ஒப்பந்தம் போட சீரியஸாக பேச்சுவார்த்தை நடத்தும் நாடுகளுக்கு இப்போது இருப்பதைப் போலவே வரி விலக்கு தொடர்ந்து இருக்கும். பேச்சுவார்த்தை நடத்தாத நாடுகளுக்கு மட்டுமே கூடுதல் வரி விதிக்கப்படும் என்றே ஸ்டீபன் கூறுகிறார்.
அமெரிக்க ஊடகத்திடம் அளித்த நேர்காணலில் ஸ்டீபன் மிரான் சில கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் பல்வேறு நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகள் நல்ல நிலையில் சென்று கொண்டு இருப்பதாகக் குறிப்பிட்டார். இதனால் திடீரென மீண்டும் வரிகளை அறிவித்தால் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் பேச்சுவார்த்தை நடத்தும் நாடுகளுக்கு வரி விலக்கு காலம் நீட்டிக்கப்படும் என்றார்.
இந்தியாவைப் பாதிக்குமா?
இதுவரை பிரிட்டனுடன் மட்டுமே வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது. கனடா, ஜப்பான் போன்ற பிற நாடுகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் எந்த ஒப்பந்தமும் இன்னும் எட்டப்படவில்லை. இந்தியாவுடன் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என டிரம்ப் கூட கூறியிருந்தார். ஆனால், அதுவும் இதுவரை கையெழுத்தாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் ஸ்டீபன் கூறியதன்படி பார்த்தால் இந்தியாவுக்குக் கூடுதல் வரிகள் விதிக்கப்படாது. வரி விலக்கு காலம் நீட்டிக்கப்படும்.












Click it and Unblock the Notifications