சீனா ஓகே.. சம்பந்தமே இல்லாமல் கனடா, மெக்சிகோ மீது டிரம்ப் வரி விதித்தது ஏன்? மாஸ்டர் பிளானே இதுதான்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் சீனா, கனடா, மெக்சிகோ நாடுகளுக்கு வரி விதித்து உத்தரவிட்டுள்ளார். டிரம்ப் கடந்த காலத்திலேயே சீனா மீது வரி விதித்து இருக்கிறார் என்பதால் அது ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் கனடா, மெக்சிகோ நாடுகள் மீது வரி விதித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே உள்ளது. சீனாவுடன் டிரம்ப் இந்த இரு நாடுகள் மீது எதற்காக வரி விதித்தார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் தடாலடி உத்தரவுகளுக்குப் பெயர் போனவர். யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பிப்பார். அதுதான் டிரம்பின் ஸ்டைல்.

வரி விதிப்பு:
இந்த முறையும் கூட அவர் அதைத்தான் செய்துள்ளார். திடீரென சீனா, கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரி விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார். சீனா இறக்குமதிக்கு 10 சதவிகிதமும், கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் மீதான இறக்குமதிக்கு 25% வரி விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்கப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற இந்த நடவடிக்கையை எடுப்பதாக டிரம்ப் கூறியிருக்கிறார். அவர் சீனா மீது வரி விதிப்பார் என்பது பலரும் எதிர்பார்த்த ஒன்று தான். கடந்த 2017- 2021 ஆட்சியின் போது கூட டிரம்ப் சீனா மீதான பொருட்களுக்கு இறக்குமதி வரி விதித்திருந்தார். ஆனால், கனடா மற்றும் மெக்சிகோ மீதான வரி பலரும் எதிர்பார்க்காத ஒன்று.. அமெரிக்கா தனது எல்லை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோவுக்கே வரி விதித்துள்ளது. திடீரென இந்த இரு நாடுகளுக்கு அவர் வரி விதிக்க என்ன காரணம் என்பதை நாம் பார்க்கலாம்.
என்ன காரணம்:
மெக்சிகோ, கனடா, சீனா ஆகிய நாடுகளின் சட்ட விரோத குடியேற்றத்தைத் தடுக்கவும், ரவுடிகள், போதைப்பொருட்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த தைரியமான நடவடிக்கையை எடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை கூறியிருக்கிறது. இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள உத்தரவில், "இந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வருவோர் சுகாதாரம் உட்படப் பல விவகாரங்களில் ஒரு அவசர நிலையை உருவாக்கியுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ, கனடா:
மேலும், கிரிமினல் கார்டெல்களுக்கு ரசாயனங்கள் வருவதைத் தடுக்கவும், நாடுகடத்தக் குற்ற அமைப்புகளால் பணமோசடி செய்வதை நிறுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கச் சீன அதிகாரிகள் தவறிவிட்டனர் என்பதால் சீனா மீது வரி விதிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. கனடாவைப் பொறுத்தவரை அங்கிருந்து வரும் போதை பொருட்களைத் தடுக்க கனடா அரசு தவறிவிட்டதாக டிரம்ப் தரப்பு குற்றஞ்சாட்டுகிறது. கனடாவில் போதைப் பொருள் நெட்வொர்க் இப்போது சர்வதேச அளவில் செயல்படத் தொடங்கிவிட்டதாகவும் டிரம்ப் தரப்பு கூறுகிறது...
மெக்சிகோ மீது சட்டவிரோத குடியேற்றம், போதைப்பொருள் கடத்தல், கேங் பிரச்சினையைக் கட்டுப்படுத்த தவறியது ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. மேலும், மெக்சிகன் போதைப்பொருள் கடத்தல் அமைப்புக்கள் மெக்சிகோ அரசுடன் கூட்டணி இருப்பதாகவும் வெள்ளை மாளிகை தரப்பு பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதன் காரணமாகவே சீனா மட்டுமின்றி மெக்சிகோ கனடா ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா வரியை விதித்துள்ளன.
பதிலடி:
இதற்குப் பதிலடி தரும் விதமாகக் கனடா ஏற்கனவே அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 25% வரி விதித்துப் போவதாக அறிவித்துள்ளது. மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளும் கூட பதிலடியாக வரி விதிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச அளவில் வரி போரையே உருவாக்கும் அபாயம் இருக்கிறது.












Click it and Unblock the Notifications