ட்விட்டர் - எலான் மஸ்க் டீல்! ஆவேசமாகி பராக் அகர்வாலை சூழ்ந்து கொண்ட ஊழியர்கள்..என்ன தான் நடக்கிறது
வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் தன்வசப்படுத்தி உள்ளது. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த சில காலமாகவே ட்விட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
சுகேஷ் சந்திரசேகருடன் நெருக்கம்.. நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் ரூ. 7 கோடி சொத்துகள் முடக்கம்!
இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் எலான் மஸ்க் ஒட்டுமொத்தமாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்கத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
இறுதியான டீல்
முதலில் இதை மறுத்த ட்விட்டர் போர்ட், எலான் மஸ்கை தடுக்கும் முயற்சியில் இறங்கியது. இருப்பினும், ஒரு கட்டத்திற்குப் பின்னர், ட்விட்டர் போர்ட் இறங்கி வந்தது. அதன்படி ஒட்டுமொத்தமாக ட்விட்டர் நிறுவனத்தை சுமார் 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் வாங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதாவது ஒரு ஷேரை சுமார் 54 டாலருக்கு எலான் மஸ்க் வாங்கினார். இதன் மூலம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக இருந்த ட்விட்டர் இனி தனிநபர் நிறுவனமாக மாறுகிறது.
சலசலப்பு
எலான் மஸ்க் கைகளில் ட்விட்டர் நிறுவனம் சென்றுள்ள நிலையில், இனி அங்குப் பல அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பா, ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் குறிப்பிட்ட சதவிகித ஊழியர்களை மஸ்க் நீக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இது அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு மத்தியில் சலசலப்பை உருவாக்கி உள்ளது. இதை அவர்கள் நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வாலிடம் கொட்டி தீர்த்து உள்ளனர்.
எலான் மஸ்க்
அதாவது ட்விட்டர் நிறுவனத்தின் டாப் நிலைகளில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்க எலான் மஸ்க் திட்டமிட்டு உள்ளார். இருப்பினும், எந்தளவுக்குச் செலவுகளைக் குறைக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார் என்பது குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை. அதேநேரம் ட்விட்டர் நிறுவனம் முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் வரும் வரை செலவுகளைக் குறைக்கும் முடிவுகளை எலான் மஸ்க் எடுக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
ஆவேசமான ஊழியர்கள்
இதனிடையே ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் இடையேயான மீட்டிங் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது ஆவேசமான ட்விட்டர் ஊழியர் ஒருவர், "இந்த டீல் முடிந்தால், ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் பலருக்கு வேலை இருக்காது என்று கூறுகிறார்கள். இதை பற்றி உங்களது நேர்மையான எண்ணம் தான் என்ன" என்று கேள்வி எழுப்பினார்.
பராக் அகர்வால்
அதற்கு பதில் அளித்த பராக் அகர்வால், "ட்விட்டர் நிறுவனம் இத்தனை காலம் எப்படி அதன் ஊழியர்கள் மீது அக்கறை கொண்டு இருந்ததோ, வரும் காலத்திலும் இந்த நடைமுறையில் மாற்றம் இருக்காது" என்றார். அதேபோல ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதற்கு முன்பும் சரி, அதன் பின்னரும் சரி ஊழியர்களின் சேர்க்கை விகிதம் மாறவில்லை என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மாற்றம் இருக்கும்
எலான் மஸ்க் வருகை என்பது ட்விட்டர் நிறுவனத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே குழப்பம் அடைந்துள்ள ஊழியர்கள் மத்தியில் பேசிய பராக் அகர்வால், "புதிய தலைமையின் கீழ் வரும் காலத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். அதேநேரம் கடந்த சில ஆண்டுகளில் நாம் இப்போது இருப்பதை விட சிறப்பாகச் செயல்பட்டிருக்க முடியும். அது குறித்துத் தான் நான் நிறைய யோசிக்கிறேன்" என்றார்.
வழக்கறிஞர் விஜயா காடே
டெக் நிறுவனங்களிடையே பெரிதும் மதிக்கப்படுபவர் ட்விட்டர் மூத்த வழக்கறிஞர் விஜயா காடே. கடந்த திங்கள்கிழமை, ட்விட்டர் நிறுவனத்தின் சட்ட மற்றும் கொள்கை குழுக்களுடனான சந்திப்பின் போது, ட்விட்டர் நிறுவனத்தின் வருங்கால செயல்பாடுகள் குறித்து கவலையை வெளிப்படுத்தியபோது காடே கண்ணீர் விட்டு அழுததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், சில நாட்களுக்கு முன்பு இவர் விமர்சித்து மஸ்க் ட்வீட் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.