இண்டியாஸ்போரா அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே உறவை மேம்படுத்துகிறது.. கமலா ஹாரிஸ்
வாஷிங்டன்: இந்தியாவுக்கான அமெரிக்காவின் கோவிட்-19 நிவாரண உதவிகள் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் புலம் பெயர்ந்தோர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் கலந்து கொண்டு பேசினார்.
Recommended Video
கமலா ஹாரிஸ் வெள்ளிக்கிழமை ஆற்றிய உரை, வணக்கம். உங்களுடன் இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். பல ஆண்டுகளாக, இண்டியாஸ்போரா மற்றும் அமெரிக்க இந்திய அறக்கட்டளை போன்ற புலம்பெயர்ந்தோர் குழுக்கள் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே பாலமாக இருந்து உறவினை மேம்படுத்தி வருகின்றன.

கடந்த ஆண்டு, நீங்கள் கோவிட்-19 நிவாரண முயற்சிகளுக்கு பெரும் பங்களிப்பினை வழங்கி இருக்கிறீர்கள். உங்கள் பணிக்கு நன்றி. எனது முந்தைய தலைமுறையினர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பது உங்களில் பலருக்குத் தெரியும். எனது தாய் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். எனது குடும்ப உறுப்பினர்கள் பலர் இப்போது இந்தியாவில் வசிக்கிறார்கள்.
அமெரிக்கா, இந்தியாவின் நலனுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. கோவிட்-19 நோய்த் தொற்று மற்றும் இறப்புகள் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இதயத்தை கனக்கச் செய்கிறது. உங்களில் சிலர், அன்புக்குரியவர்களை இழந்திருக்கிறீர்கள். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிலைமை மோசமடையும் என்பது தெரிந்தவுடன் எங்கள் நிர்வாகம் நடவடிக்கைகளில் இறங்கிவிட்டது. ஏப்ரல் 26, திங்கட் கிழமை, ஜனாதிபதி ஜோ பைடன், இந்தியப் பிரதமருடன் பேசினார். ஏப்ரல் 30, வெள்ளிக்கிழமை அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் அமெரிக்க மக்களின் நிவாரணப் பொருட்கள் இந்தியாவில் இறங்கிவிட்டன.
ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், என்95 முகக்கவசங்கள் போன்ற பொருட்கள் ஏற்கனவே அனுப்பபட்டுவிட்டன. அவை மேலும் அனுப்பப்பட இருக்கின்றன. கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் ரெம்டிசிவர் மருந்தும் அனுப்பபட்டுள்ளது.
இந்தியாவும், இதர நாடுகளும் தம் மக்களுக்கு விரைவாக தடுப்பூசி வழங்குவதற்கு உதவும் வகையில் கோவிட்-19 தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை இடைக்கால நிறுத்தம் செய்ய ஆதரவு அளித்துள்ளோம். இந்தியாவும், அமெரிக்காவும்தான் இன்று உலகில் மிக அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டுள்ளன.
தொற்றின் தொடக்க காலத்தில், நமது மருத்துவமனைகள் நிலைமையை சமாளிக்கத் திணறியபோது, இந்தியா உதவிக்கரம் நீட்டியது. இன்று இந்தியாவுக்கு உதவி தேவைப்படும்போது, தேவையான உதவிகளை வழங்க உறுதி பூண்டுள்ளோம்.
இந்தியாவின் நண்பர், ஆசிய குவாட் அமைப்பின் உறுப்பினர், சர்வதேச சமூகத்தின் அங்கம் என்ற முறையில் இந்த உதவிகளை வழங்குகிறோம். நாம் அனைவரும் தொடர்ந்து இணைந்து செயல்பட்டால், இந்த பிரச்னையிலிருந்து மீள்வோம். இணைந்து செயல்படுவோம் என்று உரையில் ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications