"அத்தனை அறிகுறியும் அதையே காட்டுகிறது!" புதிய உருமாறிய கொரோனா.. ஆசியாவில் உயரும் கேஸ்கள்.. ஐநா பகீர்
வாஷிங்டன்: கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டு இருக்கும் நிலையில், உலகில் சில நாடுகளில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக ஐநா சபை எச்சரித்துள்ளது.
கடந்த 2020 இறுதியில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா உலகெங்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனாவால் உயிரிழப்புகள் மட்டுமின்றி சர்வதேச நாடுகளின் பொருளாதாரமும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
ஆல்பா, டெல்டா, பீட்டா, ஓமிக்ரான் என அடுத்தடுத்து தோன்றிய உருமாறிய கொரோனா வைரஸ்கள் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது தான் கொரோனா பாதிப்பில் இருந்து உலக நாடுகள் மெல்ல மீண்டு வருகிறது.

ஐநா சபை
கடந்த காலங்களை வைத்துப் பார்க்கும் போது, சராசரியாக ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை புதிய உருமாறிய கொரோனா வைரஸ் உருவாகி வருகிறது. எனவே, புதிய உருமாறிய கொரோனா விரைவில் உருவாகலாம் என்று வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வரும் சூழலில், இது தொடர்பாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார். அனைவருக்கும் வேக்சின் வழங்க மருந்து நிறுவனங்கள் உலக நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்தார்.

அன்டோனியோ குட்டெரெஸ்
நேற்று நடைபெற்ற GAVI COVAX அட்வான்ஸ் மார்க்கெட் உச்சி மாநாட்டில் காணொலி மூலம் கலந்து கொண்டு பேசிய அன்டோனியோ குட்டெரெஸ், "கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வர இன்னும் பல காலம் உள்ளது. இப்போது உலகெங்கும் தினசரி 15 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது. ஆசியாவில் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அதேபோல ஐரோப்பாவிலும் புதிய கொரோனா அலை ஏற்பட்டுள்ளது.

வேக்சின் பாகுபாடு
உலகின் பல நாடுகளில் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து இல்லாத அளவுக்குக் கூட அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. போதியளவு வேக்சின் பணிகள் இல்லையென்றால் கொரோனா வைரஸ் எந்தளவு வேகமாக உருமாற்றம் அடைந்து பரவும் என்பதற்கு ஓமிக்ரான் கொரோனாவே சாட்சி. சில உயர் வருமானம் கொண்ட நாடுகள் இரண்டாவது பூஸ்டர் டோஸுக்குத் தயாராகிக் கொண்டு இருக்கிறது. ஆனால், ஏழை நாடுகளில் வேக்சின் பணிகள் மிக மந்தமாகவே நடைபெறுகிறது.

எப்போது உருவாகும்
இது நமக்குள் இருக்கும் ஆழமான சமத்துவமற்ற நிலையை அப்படியே பிரதிபலிக்கிறது. இப்படிப் பல கோடி பேர் வேக்சின் போடாமல் இருப்பது புதிய உருமாறிய கொரோனா தோன்றக் காரணமாக அமைந்துவிடும். இதனால் உயிரிழப்புகளும் பொருளாதார பாதிப்புகளும் கூட அதிகரிக்கலாம். அடுத்து உருமாறிய கொரோனா உருவாகுமா என்பது கேள்வி இல்லை. எப்போது உருவாகும் என்பது மட்டுமே கேள்வி.

மிகவும் முக்கியம்
இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் 70 சதவீத தடுப்பூசி கவரேஜை எட்ட வேண்டும் என்ற இலக்கிலிருந்து நாம் வெகு தொலைவில் இருக்கிறோம். சராசரியாக ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை புதிய உருமாறிய கொரோனா தோன்றி வருவதால் இந்த நேரம் மிகவும் முக்கியமானது. உலகில் உள்ள அனைவருக்கும் மிக விரைவில் வேக்சின் செலுத்துவதை உறுதி செய்யும் வகையில் உலக நாடுகளும் மருந்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்றார்.

ஓமிக்ரான் XE
பிரிட்டன் நாட்டில் ஓமிக்ரான் XE வகை என்ற புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது மற்ற கொரோனா வகைகளை விட மின்னல் வேகத்தில் பரவுகிறது. இதுவரை 600க்கும் மேற்பட்டோருக்கு இந்த வகை ஓமிக்ரான் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய BA.2 உடன் ஒப்பிடும்போது இந்த வகை ஓமிக்ரான் குறைந்தது 10 சதவிகிதம் வேகமாகப் பரவுகிறது. இந்தியாவிலும் குஜராத் மாநிலத்தில் ஒருவருக்கு இந்த புதிய வகை ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications