இந்தியாவிடம் அத்துமீறல்.. சீன செயல்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது..அமெரிக்க வெளியுறவு செயலாளர் அதிரடி
வாஷிங்டன்: லடாக் பகுதியில் சீனா அத்துமீறியதை ஏற்றுக்கொள்ள முடியாத செயல்பாடு என்று அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மைக் பாம்பியோ அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா-அமெரிக்கா வர்த்தக கவுன்சில் ஐடியாஸ் உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் , அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பேம்பியோ உள்ளிட்டோர் உரையாற்றினர்.
நிறைவாக, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய போது இந்தியாவில் முதலீடு செய்வதற்கு அமெரிக்க தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
தைவானுக்கு ஆதரவு.. பீஜிங்குக்கு இந்தியா நெத்தியடி.. சிங்கிளாக வந்து சிக்கிக் கொண்ட சீனா...!!
மைக் பாம்பியோ பேச்சு
இந்த நிகழ்ச்சியில் மைக் பாம்பியோ பேசுகையில், நம்மை போன்ற ஜனநாயக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டியது முக்கியமானது. அதிலும் குறிப்பாக, சீன கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கக்கூடிய சவால்களை எதிர்கொள்ளும் இந்த சூழ்நிலையில் இது அவசியமாகும். நமது உள்கட்டமைப்பு திட்டங்கள், நமது வினியோக சங்கிலிகள், நமது இறையாண்மை, நமது மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை அபாயத்தில் (Risk) உள்ளன.
லடாக் மோதல்
சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் நடத்திய மோதல்கள் என்பது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைக்கு ஒரு சமீபத்திய உதாரணம். இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் வீர மரணம் அடைந்ததற்கு நாங்கள் மிகுந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். நமது தொடர் முயற்சிகளின் மூலமாக இரு நாடுகளின் நலன்களையும் நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.
சீனாவுக்கு எதிராக இந்தியா
அமெரிக்காவின் பாதுகாப்பு கூட்டாளியாக இந்தியா மாறி வருவதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன் . இந்திய பசிபிக் மண்டலம் மட்டுமல்லாது உலகம் முழுக்கவே இந்த கூட்டுறவு மற்றும் நட்புறவு அதிகரித்துள்ளது. சீனாவிலிருந்து உலக விநியோக சங்கிலியை தங்கள் பக்கம் கொண்டு வரும் ஆற்றல் இந்தியாவுக்கு இருக்கிறது.
சீனாவை நம்பியிருக்க வேண்டாம்
தொலைத்தொடர்பு துறை, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றுக்கு சீனாவை நம்பி இருக்கக் கூடிய சூழ்நிலையை மாற்ற கூடிய ஆற்றல் இந்தியாவிடம் இருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் நல்ல பெயரை பெற்றுள்ளது இந்தியா. அமெரிக்காவிடம் இந்தியாவுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. இவ்வாறு மைக் பேம்பியோ தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு, சீனாவுடனான எல்லைப் பிரச்சனை நிலவும் இந்த நேரத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரின் இந்த பேச்சு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.