அமெரிக்க முட்டாள்தனத்தால்.. சீனா அடுத்து என்ன செய்யப்போகிறது தெரியுமா.. டிரம்ப் முக்கிய "வார்னிங்"
வாஷிங்டன்: ‛‛அமெரிக்கா முட்டாள் போன்று செயல்படுவதால் சீனாவும் போர் தொடுக்க வாய்ப்புள்ளது'' என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய குண்டை வீசியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இன்று 8 வது நாளாக உக்ரைனில் போர் மேகங்கள் கலையவில்லை. ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. கீர்சன் நகரை ரஷ்ய படை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
கீவ் நகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய ராணுவம் செயல்பட்டு வருகிறது. உக்ரைன் ராணுவமும் நாட்டை காக்கும் வகையில் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தியா நடுநிலை
ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு உள்பட அனைத்து ஐரோப்பிய நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை 20க்கும் அதிகமான நாடுகள் விதித்துள்ளன. இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கிறது. போரை கைவிட்டு இருநாட்டு பிரச்சனைகளை பேசி தீர்த்து கொள்ளலாம் என பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினிடம் கூறியுள்ளார். ஆனால் விலாடிமிர் புதின் போரை இன்னும் கைவிடவில்லை.

அடுத்த ‛டார்க்கெட்’
இந்நிலையில் தான் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய குண்டை வீசியுள்ளார். தைவான் மீது படையெடுக்க சீனா தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛தைவான் மீது அடுத்த படையெடுப்பு நிகழலாம். இதை சீனா நிகழ்த்தலாம். ஏனென்றால், அமெரிக்கா முட்டாள்தனமாக செயல்படுகிறது. அமெரிக்க தலைவர் திறமையற்றவராக பார்க்கப்படுகிறார். படையெடுப்பை சீனா நிச்சயம் செய்யும். இது அவர்களுக்கான நேரம்.

சீனா அதிபர்
இதனால் தான் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை சீன அதிபர் ஜி ஜின்பிங் உன்னிப்பாக கவனித்து வருகிறார். ஜி ஜின்பிங் உளவு விஷயத்தில் திறமையானவர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியது, அமெரிக்கர்களை அங்கேயே விட்டுவிட்டு வந்தது ஆகியவற்றை அவர் நினைத்து பார்க்கிறார். இதனால் சீனா நினைப்பதை செய்ய வாய்ப்புள்ளது'' என்றார்.

முன்பு நடந்தது என்ன
முன்னதாக ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினின் செயல்பாடு குறித்து டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவிக்கையில், ‛‛உக்ரைனின் ஒரு பெரும்பகுதியை சுதந்தரம் பெற்றதாக புதின் அறிவித்துள்ளார். அவர் ஒரு மேதை. உக்ரைனில் அமைதி ஏற்படுத்தும் நபராக புதின் இருக்க போகிறார். எனக்கு புதினை நன்கு தெரியும். நான் அவருடன் நன்கு பழகினேன். அவர் என்னை விரும்பினார். நானும் அவரை விரும்பினேன்'' என பெருமையாக கூறினார்.
Recommended Video

2வது முறையாக முட்டாள்
அதன்பிறகு அடுத்த சில நாட்களிலேயே உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் பயங்கரமானது. இத்தகைய சீற்றம், அட்டூழியம் ஒருபோதும் நடந்திருக்ககூடாது என ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினை விமர்சித்து இருந்தார். மேலும் ரஷ்ய அதிபர் புதின், ஜோபிடனை வாத்திய கருவியான டிரம் போல் வாசிக்கிறார். உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பு, ஜோபைடனின் பலவீனத்தை காட்டுகிறது. ஊமையாக ஜோபைடன் உள்ளார் என விமர்சனம் செய்ததோடு முட்டாள் என மறைமுகமாக விமர்சித்து இருந்தார். தற்போது 2வது முறையாகவும் ஜோபைடனை முட்டாள் என மறைமுகமாக டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications