பெரும் பதற்றம்! ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா தாக்குதல்.. மத்திய கிழக்கு நாடுகளில் அடுத்து என்ன
வாஷிங்டன்: மத்திய கிழக்குப் பகுதியில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், அமெரிக்கா அங்கே நடத்தியுள்ள தாக்குதல் ஒன்று பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த சில காலமாகவே மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றமான ஒரு சூழல் நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக இஸ்ரேல் ஹமாஸ் போருக்குப் பிறகு பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த போர் அந்த பிராந்தியத்தில் இருந்த அமைதியை முற்றிலுமாக சீர் குலைத்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் இந்த போர் பிராந்திய போராக மாறிவிடக் கூடாது என்பதே அனைத்து நாடுகளின் விருப்பமாக இருக்கிறது. ஆனால், களத்தில் அதற்கு நேர்மாறான நிகழ்வுகளே நடக்கிறது.
ஹிஸ்புல்லா: ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படையினர் அங்குள்ள அண்டை நாடுகள் மீதும் அமெரிக்கப் படைகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹமாஸ் படை மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கே பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனால் எங்கு அங்குப் பிராந்திய மோதல் வெடிக்குமோ என்பதைப் பலரது அச்சமாக இருக்கிறது.
இதற்கிடையே மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. அதாவது ஈராக் பகுதியில் அமெரிக்க ராணுவம் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இந்த அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து ஈரான் ஆதரவு படைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தியது. அதில் 3 அமெரிக்க வீரர்கள் படுகாயமடைந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியுள்ளது.
அமெரிக்கா தாக்குதல்: ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவுப் படைகள் மீது அமெரிக்கப் படைகள் இப்போது தாக்குதல் நடத்தி இருக்கிறது, இந்த தாக்குதல் தேவையான ஒன்று என்றும் அமெரிக்க வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இன்று அமெரிக்க அதிபரின் வழிகாட்டுதலின்படி, அமெரிக்க ராணுவப் படைகள் ஈராக்கில் உள்ள கட்டாய்ப் ஹிஸ்புல்லா மற்றும் அதன் மற்ற குழுக்கள் பயன்படுத்தும் 3 தளங்களில் தேவையான மற்றும் பதிலடி தாக்குதல்களை நடத்தியது. ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படும் நிலையில், அதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளோம்.
ஈரானின் ஹிஸ்புல்லா அமைப்பு அமெரிக்கப் படைகள் இருக்கும் எர்பில் விமான தளத்தில் தாக்குதல் நடத்தி இருந்தனர். இந்த தாக்குதலில் 3 பேர் காயம் அடைந்தனர். அதில் ஒருவரது உடல்நிலை மிக மோசமாக இருக்கிறது. அவர்கள் விரைவாகக் குணமடைய வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்.
தயங்க மாட்டோம்: அதிபர் பைடன் அமெரிக்காவைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க எப்போதும் தயங்கமாட்டார். நான் ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அமெரிக்கா, எங்கள் வீரர்கள். எங்கள் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க அதிபரும் நானும் ஒருபோதும் தயங்க மாட்டோம். இதுதான் எங்களுக்கு முக்கியமானது. அதேநேரம் நாங்கள் இந்த பிராந்தியத்தில் மோதலை அதிகரிக்க நாங்கள் முயலவில்லை.
நாங்கள் எங்கள் வீரர்களையும் எங்கள் ராணுவ தளங்களையும் பாதுகாக்கவே தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறோம். அதில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications