"கறுப்பு நாள்..!" அமெரிக்காவை உலுக்கிய நாடாளுமன்ற வன்முறை.. டிரம்பிற்கு தொடர்பு? விசாரிக்க முடிவு
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக முக்கிய முடிவை விசாரணைக் குழு எடுத்து உள்ளது.
கடந்த 2020இல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டிரம்பை ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வீழ்த்தினார். இருப்பினும், தேர்தலில் முறைகேடு நடந்ததாக டிரம்ப் ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டி வந்தார்.
கடைசி வரை தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத டிரம்ப், தேர்தல் மோசடியே தனது தோல்விக்குக் காரணம் என்று ஆதரவாளர்களிடம் கூறி வந்தார். இதனால் அங்குத் தொடர்ந்து போராட்டம் நடந்தது.

நாடாளுமன்ற வன்முறை
குறிப்பாகக் கடந்த 2021 ஜனவரி 6ஆம் தேதி பைடன் முறைப்படி தேர்ந்தெடுக்கும் நிகழ்வு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், திடீரென உள்ளே புகுந்த டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தைச் சூறையாடினர். இதில் சில போலீசாரும் கொல்லப்பட்டனர். அமெரிக்க வரலாற்றிலேயே இது மிகவும் மோசமான கறுப்பு நாளாகப் பார்க்கப்படுகிறது.

டிரம்பிடம் விசாரணை
இது தொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க எம்பிகளை கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வரும் இந்தக் குழு அடுத்ததாக முன்னாள் அதிபர் டிரம்பிடம் இந்த வன்முறை தொடர்பாக விசாரணை செய்ய முடிவு செய்து உள்ளது. அடுத்த மாதம் அங்கு முக்கிய தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக டிரம்பிடம் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன நடந்தது
இது தொடர்பாக விசாரணைக் குழுவின் தலைவர் பென்னி தாம்சன் கூறுகையில், "இந்த விசாரணையில் எங்களுக்கு பல்வேறு விஷயங்கள் தெரிய வந்தது. இருப்பினும், அதில் நாங்கள் உறுதியாக இருக்க வேண்டும். எந்த இடத்திலும் தப்பு நடந்துவிடக் கூடாது. இதன் காரணமாகவே டிரம்பிடம் நாங்கள் விசாரணை நடத்த வேண்டி இருக்கிறது. இந்தச் சம்பவத்திற்கு யார் காரணம் என்பதை அமெரிக்க மக்களுக்குக் கூற வேண்டும். தனது செயல்களுக்கு டிரம்ப் பொறுப்பேற்க வேண்டும்.

விசாரணைக்கு உத்தரவு
அமெரிக்க நாடாளுமன்ற வன்முறைச் சம்பவம் டிரம்பை மையமாகக் கொண்டே இயங்குகிறது. எனவே, அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்க வேண்டும். அப்போது தான் அன்றைய தினம் என்ன நடந்தது என்பது முழுமையாக நமக்குத் தெரியும்" என்றார்.டிரம்பிடம் விசாரணை நடத்துவது தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் குழுவில் உள்ள 9 உறுப்பினர்களும் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றே வாக்களித்தனர்.

திட்டம்
பலரது ஆலோசனைகளைப் புறக்கணித்து டிரம்ப் தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளையே பரப்பி வந்ததாகவும் அந்த குழு தெரிவித்து உள்ளது. இதுவே அமெரிக்க நாடாளுமன்ற வன்முறைக்கு வழிவகுத்ததாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது. தேர்தலில் தோல்வி அடைந்தால் மோசடி நடந்ததாகக் கூறி, குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்பதை டிரம்ப் முன் கூட்டியே திட்டமிட்டு இருந்தார் என்றும் கூறப்பட்டு உள்ளது.

மறுப்பு
இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை டிரம்ப் முழுமையாக மறுத்து உள்ளார். இந்த விசாரணை முடிவை எதிர்த்து டிரம்ப் தரப்பு மேல்முறையீடு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "இந்த கமிட்டி தேர்தலில் நடந்த மாபெரும் மோசடியைக் கண்டு கொள்ளவில்லை.. இதன் காரணமாகவே ஜனவரி 6ஆம் தேதி சம்பவம் நடந்தது" என்று அவர் தெரிவித்து உள்ளார்.

தேர்தல்
குடியரசு கட்சியினரும் டிரம்பிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், அதிலும், இந்த விசாரணை தொடர்பான முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications