ஆட்டத்தை தொடங்கிய டிரம்ப்! சட்ட விரோதமா குடியேறியவர்கள் அடுத்தடுத்து கைது! பறக்கும் ராணுவ விமானங்கள்
வாஷிங்டன்: அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போதே புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த உள்ளதாக டிரம்ப் தொடர்ந்து எச்சரித்து வந்தார். இதற்கிடையே டிரம்ப் அதிபராகப் பதவியேற்று சில நாட்கள் கூட ஆகாத நிலையில், அமெரிக்காவில் சட்ட விரோதமாகத் தங்கி இருந்து பல நூறு புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலரை நாடு கடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் சமயத்திலேயே சட்டவிரோதமாக நாட்டில் குடியேறியவர்களாலேயே அமெரிக்காவில் பெரிய பிரச்சினை ஏற்படுவதாக டிரம்ப் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்.

டிரம்ப்:
இதனால் அமெரிக்கர்களுக்கு எந்தவொரு வேலையும் கிடைப்பதில்லை என்றும் இதுபோல சட்டவிரோதமாக நாட்டிற்குள் வந்தவர்கள் தான் மோசமான குற்றச் செயல்களிலும் ஈடுபடுவதாகக் கூறி வந்தார். இதனால் தான் அதிபராகப் பதவியேற்ற முதல் நாளே சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடு கடத்த உத்தரவிடப்போவதாக டிரம்ப் கூறி வந்தார். சொன்னது போலவே முதல் நாளே இது தொடர்பான நிர்வாக உத்தரவுகளை அவர் பிறப்பித்தார்.
டிரம்பின் உத்தரவைத் தொடர்ந்து சட்ட விரோதமாகக் குடியேறியவர்களை அமெரிக்க அதிகாரிகள் ஒடுக்கத் தொடங்கியுள்ளனர். டிரம்ப் அதிபர் பதவிக்கு வந்த உடன் மட்டும் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களில் பல நூறு பேர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாட்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேலும் தொடரும் என்றே தெரிகிறது.
புலம்பெயர்ந்தோர் கைது:
கடந்த மூன்று நாட்களில் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டோர் குறித்த விவரங்களை வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் பகிர்ந்துள்ளார். அதன்படி 3 நாட்களில் அமெரிக்க அதிகாரிகள் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களில் 538 பேரைக் கைது செய்துள்ளதாகவும் ராணுவ விமானத்தைப் பயன்படுத்திப் பல நூறு பேரை நாடு கடத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாடு கடத்தல்:
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "சட்டவிரோதமாகக் குடியேறியவர்களில் 538 பேரை டிரம்ப் நிர்வாகம் கைது செய்துள்ளது. சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள், கேங் உறுப்பினர்கள் (ரவுடிகள்), சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைச் செய்த குற்றவாளிகள் எனப் பலரைக் கைது செய்துள்ளோம். இது தவிர டிரம்ப் நிர்வாகம் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களில் பல நூறு பேரை ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியுள்ளது. இது வரலாற்றில் மிகப் பெரிய நாடு கடத்தல் நடவடிக்கையாகும். சொன்னபடியே வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது" என்றார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி 20ம் தேதி பதவியேற்றார். அப்போதே அவர் நாட்டின் தெற்கு எல்லை (மெக்சிகோ) பகுதியில் எமர்ஜென்சி நிலையை அறிவித்தார். மேலும், சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் என அறிவித்தார். இதற்காக எனிமி ஏலியன் சட்டத்தையும் பயன்படுத்துமாறு அவர் அறிவுறுத்தினார். இந்த எனிமி ஏலியன் சட்டம் அமெரிக்காவில் வசிக்கும் அந்நிய நாட்டினரை நாடு கடத்தும் அதிகாரத்தை அதிபருக்கு வழங்குகிறது.
யாருக்குப் பாதிப்பு:
அதேநேரம் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போருக்கு மட்டுமே இதனால் பாதிப்பாகும். முறையாக விசா பெற்று, உரியக் காலக்கெடுவில் அங்குத் தங்கி வருபவர்களுக்கு இதனால் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. எனவே, உரிய முறையில் விசா பெற்று அங்கு வேலை செய்து வரும் இந்தியர்கள், குறிப்பாக ஐடி நிறுவனங்களில் வேலை பார்ப்போர் இதனால் அச்சப்படத் தேவையில்லை.












Click it and Unblock the Notifications