"ஒர்க் பெர்மிட் நீட்டிக்கப்படாது!" அடிமடியிலேயே கை வைத்த டிரம்ப்! இந்தியர்களுக்கு தான் பெரிய சிக்கல்
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டினருக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்போது அப்படித் தான் வேலை செய்யும் உரிமம் தொடர்பான முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இது அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்குப் பெரும் சிக்கலைத் தருவதாகவே இருக்கும். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவில் தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. இதனால் வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்குவது நாளுக்கு நாள் கடினமான ஒரு விஷயமாக மாறி வருகிறது. அந்த வரிசையில் தான் டிரம்ப் நிர்வாகம் இன்று இன்னொரு சர்ச்சை உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.

புதிய உத்தரவு
அமெரிக்காவில் வேலை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பெர்மிட் இனிமேல் தானாக நீட்டிக்கப்படாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது இதற்கு முன்பு வரை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் விண்ணப்பித்தாலே தானாக நீடிக்கப்படும். அதை நிறுத்தும் வகையில் டிரம்ப் அரசு இடைக்கால விதிகளை அறிவித்துள்ளது. இதனால் இந்தியர்கள் உட்படப் பல ஆயிரம் வெளிநாட்டு ஊழியர்கள் பாதிக்கப்படலாம்.
இன்று அக்டோபர் 30ம் தேதி இந்த அறிவிப்பு வெளியானது. எனவே, இதற்கு முன்பு விண்ணப்பித்தவர்களுக்குத் தானாக நீட்டிப்பு வழங்கப்பட்டு இருக்கலாம்.. அவர்களுக்கு எந்தவொரு சிக்கலும் இல்லை. அதேநேரம் இனிமேல் விண்ணப்பிப்போருக்கு எந்தவொரு நீட்டிப்பும் வழங்கப்படாது என்று டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
என்ன காரணம்!
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஸ்கிரீனிங் செய்யப்பட்ட பிறகே ஊழியர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என டிரம்ப் நிர்வாகம் கூறியிருக்கிறது. முன்பு பைடன் அதிபராக இருந்தபோது, ஒருவர் சரியான நேரத்தில் விண்ணப்பித்து இருந்தாலே அவர் ஒர்க் பெர்மிட் முடிந்த பிறகும் 540 நாட்கள் வரை அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கப்பட்டனர். அந்த விதிகள் இப்போது மாற்றப்பட்டுள்ளன.
புலம்பெயர் தொழிலாளர்களின் பின்னணி குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோசடியைத் தடுக்கவும், அமெரிக்காவில் மோசமான விஷயங்கள் செய்வோரைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வேலை செய்வது என்பது சலுகை தானே தவிர.. அது உரிமை இல்லை என்றும் அமெரிக்கக் குடியுரிமை துறை இயக்குநர் ஜோசப் எட்லோ தெரிவித்தார். மேலும், இனிமேல் ஒவ்வொரு முறையும் ஒருவரின் பின்னணி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பிறகே ஒர்க் பெர்மிட் நீட்டிப்பு வழங்கப்படும் என்றார்.
ஒர்க் பெர்மிட் யாருக்கு தேவை?
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஒர்க் பெர்மிட் காலாவதியாக 180 நாட்களுக்கு முன்னதாகவே புதுப்பித்தல் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். தாமதமாகத் தாக்கல் செய்யும்போது ஒர்க் பெர்மிட் கிடைக்கவும் தாமதமாக வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
EAD (படிவம் I-766/EAD) மூலம் ஒருவர் குறிப்பிட்ட காலத்திற்கு அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார். இதில் கிரீன் கார்டு வைத்திருப்போருக்கு EAD தேவையில்லை. ஏனென்றால் கிரீன் கார்டு பெறுவதே வேலை செய்ய உரிமை இருக்கிறது என்பதைக் காட்டும் ஆதாரமாகும்! H-1B, L-1B, O அல்லது P உள்ளிட்ட விசாக்களில் இருப்போருக்கும் இந்த ஆவணம் தேவையில்லை.. இதுபோன்ற வேலை செய்ய அனுமதிக்கும் விசா இல்லாமல்.. வேறு விசாக்களில் வந்தவர்களுக்கு மட்டுமே இந்த ஒர்க் பெர்மிட் தேவைப்படும்.
ஹெச்-1பி விசா
வெளிநாட்டினர் அமெரிக்காவுக்கு வேலைக்காக வருவதைத் தடுக்க டிரம்ப் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் தான் ட்ரம்ப் நிர்வாகம் H-1B விசா கட்டணத்தை $100,000 (சுமார் ₹88 லட்சம்) ஆக உயர்த்தியது. உண்மையாகவே உயர் திறன் கொண்டவர்கள் மட்டுமே அமெரிக்காவுக்கு வருகிறார்கள் என்பதை உறுதி செய்யவே இந்தக் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இது தொடர்பாக அவர் அப்போது கூறுகையில், "ஹெச்-1பி திட்டத்தைப் பல்வேறு நிறுவனங்களும் தவறாகப் பயன்படுத்தி வருகிறது. அதைத் தடுக்க இப்போது சீர்திருத்தங்கள் கட்டாயமாகிறது. இங்கு அமெரிக்கத் தொழிலாளர்கள் உள்ளனர்.. அவர்களுக்கு இதன் மூலம் கிடைக்கும். அதேநேரம் நமக்குச் சிறந்த தொழிலாளர்களும் தொடர்ந்து கிடைப்பார்கள்" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications