இந்தியாவுக்கு 50% வரியை திருப்பி தரும் அமெரிக்கா? டிரம்ப் அரசு முக்கிய பாயிண்டு! என்ன காரணம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் மீதும் வரிகளை விதித்திருக்கிறார். இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் உலக நாடுகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு இருக்கிறது. இதற்கிடையே அமெரிக்கா தான் வசூலித்த வரிகளில் சுமார் 50% வரிகளைத் திரும்பச் செலுத்தும் சூழல் வரலாம் என டிரம்ப் தரப்பு கூறியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகள் மீது இஷ்டத்திற்கு வரிகளை விதித்திருந்தார். உலக நாடுகள் அமெரிக்காவிடம் அதிக வரிகளை விதிப்பதாகச் சொல்லி அவர், பரஸ்பர வரியை விதித்திருந்தார். இந்தியாவுக்குக் கூட டிரம்ப் தரப்பு இப்படித் தான் 50% வரியை விதித்துள்ளது. டிரம்ப்பின் இந்த வரிகளால் சர்வதேச அளவில் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வரிகளைத் திருப்பித் தர வேண்டி இருக்கும்
இதற்கிடையே அமெரிக்கக் கருவூலத் துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். உலக நாடுகள் மீது விதிக்கப்பட்ட வரிகளில் சுமார் 50%ஐ திருப்பித் தரும் சூழலுக்கு அமெரிக்கா தள்ளப்படலாம் என அவர் தெரிவித்தார். அதாவது அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் வரிகள் தொடர்பான வழக்கு நடக்கும் சூழலில், அதில் பாதகமான தீர்ப்பு வந்தால் அமெரிக்கா வரிகளை ரீஃபண்ட் செய்ய வேண்டி இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
என்ன காரணம்
அதாவது அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்ப் நிர்வாகம் விதித்த வரிகளை ரத்து செய்தால், அமெரிக்கா அந்த நாடுகளுக்கு ரீபண்ட் வழங்க வேண்டி இருக்கும் என ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "ஒருவேளை சுப்ரீம் கோர்ட் இதுபோல தீர்ப்பளித்துவிட்டால் சுமார் 50% வரிகளுக்கு நாங்கள் பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டியிருக்கும். இது அமெரிக்கக் கருவூலத்திற்கு மிகவும் மோசமானதாக இருக்கும்... ஆனால், நீதிமன்றம் அதைச் சொன்னால் நாங்கள் செய்தாக வேண்டும்" என்று கூறினார்.
வரி விவகாரத்தில் பல மாற்று வழிகள் இருப்பதாகக் குறிப்பிட்ட பெசென்ட், இருப்பினும் சுப்ரீம் கோர்ட் எதிரான தீர்ப்பைக் கொடுத்தால் அது டிரம்ப்பின் பேச்சுவார்த்தை நிலையைப் பலவீனப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார். அதாவது வரிகளைக் கொண்டு வரி வேறு வழிகள் இருந்தாலும் நீதிமன்ற உத்தரவு டிரம்ப்பிற்குப் பின்னடைவைத் தரும் என்றார்.
பின்னணி
அமெரிக்கா அதிபர் டிரம்ப் தனது அதிகார வரம்பை மீறி உலக நாடுகள் மீது வரிகளை விதித்துள்ளதாக அமெரிக்காவில் உள்ள கீழமை நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது. மற்ற நாடுகள் மீது வரிகளை விதிப்பது என்பதை அமெரிக்க நாடாளுமன்றம் மூலமாகவே செய்ய முடியும் என்றும் அதிபர் தனித்தையாக இதைச் செய்ய முடியாது எனச் சொல்லி கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கீழமை நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு டிரம்ப் தரப்புக்கு எதிராகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 750 பில்லியன் முதல் ஒரு டிரில்லியன் டாலர் வரையிலான வரிகள் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட சூழலில், திடீரென அதை ரத்து செய்வது மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என டிரம்ப் தரப்பு கூறியுள்ளது. ஆனாலும், டிரம்ப் வரி சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்தால்.. அமெரிக்கா தான் வசூலித்த வரி வருவாயைத் திரும்பக் கொடுக்க வேண்டியிருக்கும்.
வாய்ப்பு குறைவு
இருப்பினும், சுப்ரீம் கோர்ட்டில் டிரம்ப்பிற்கு எதிராகத் தீர்ப்பு வர வாய்ப்புகள் குறைவு என்றே சொல்லப்படுகிறது. ஏனென்றால் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் இருக்கும் சூழலில், அவர்களில் 6 பேர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியால் நியமிக்கப்பட்டவர்கள். மூவர் மட்டுமே எதிர்த் தரப்பால் நியமிக்கப்பட்டவர்கள். எனவே, பெரும்பான்மை அடிப்படையில் டிரம்ப்பிற்கு எதிராகத் தீர்ப்பு வரும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு!












Click it and Unblock the Notifications