ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை வாங்க இந்தியாவுக்கு தடை இல்லை- அமெரிக்கா நாடாளுமன்றம் ஒப்புதல்!
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து எஸ்.400 ஏவுகணைகளை வாங்குவதற்கான தடையில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் மசோதா அமெரிக்கா நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது.
உலக நாடுகளில் நிலத்தில் இருந்து வானில் உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடிய நவீன ஏவுகணைகளில் ரஷ்யாவின் எஸ்400 முக்கியமானது. இத்தகைய பாதுகாப்பு கட்டமைப்பு சீனா வசம் உள்ளது. இத்தகை ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா ரூ35,000 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் முதல் தொகுப்பு இந்தியாவிடம் ரஷ்யாவால் வழங்கப்பட்டுள்ளது.

ரஷ்யா- இந்தியா இடையேயான இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு உக்ரைன் விவகாரத்தை முன்வைத்து அமெரிக்கா முட்டுக்கட்டை போடும் எனக் கூறப்பட்டு வந்தது. அதாவது அமெரிக்காவின் காட்சா CAATSA அல்லது கேட்சா என்கிற சட்டமான உலக நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வகை செய்யக் கூடியது. அமெரிக்காவானது ஈரான், ரஷ்யா, வடகொரியா நாடுகள் மீது ஏற்கனவே பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
இதனால் ரஷ்யா- இந்தியாவின் பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கும் காட்சா சட்டத்தின் கீழ் அமெரிக்கா தடை விதிக்க வாய்ப்புள்ளது என கூறப்பட்டது. இத்தகைய நெருக்கடி மூலம், உக்ரைன் விவகாரத்தில் நடுநிலை வகிக்கக் கூடிய இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்ற முடியும் என அமெரிக்கா கருதுவதாகவும் கூறப்பட்டது. இந்தியா-ரஷ்யா இடையேயான எஸ் 400 ஏவுகணை ஒப்பந்தமானது 4 ஆண்டுகளுக்கு முன்னரே உருவானதுதான். ஆனாலும் இந்தியாவை அமெரிக்கா காட்சாவின் கீழ் மிரட்டிக் கொண்டே இருந்தது.
இந்நிலையில்தான் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா, ஏவுகணைகளை இறக்குமதி செய்வதற்கான தடைகளில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்யும் National Defence Authorization Act சட்ட திருத்த மசோதா, அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்திய வம்சாவளி எம்.பி.யான ரோ கன்னா இம்மசோதாவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், சீனா போன்ற நாடுகளின் ஆக்கிரமிப்புகளை எதிர்கொள்ள இந்தியாவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
Recommended Video
இந்த சட்ட திருத்தம், அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன் மூலம் காட்சா சட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு விலக்கு கிடைத்துள்ளது. எஸ்400 ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா பெறுவதற்கு இனி அமெரிக்கா தரப்பில் இருந்து எந்த முட்டுக்கட்டையும் இருக்காது என்பதால் இந்த தீர்மானம் நிறைவேற்றம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications